About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்
Showing posts with label 022 திருவெள்ளியங்குடி. Show all posts
Showing posts with label 022 திருவெள்ளியங்குடி. Show all posts

Thursday, 1 February 2024

108 திவ்ய தேசங்கள் - 022 - திருவெள்ளியங்குடி 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||022. திருவெள்ளியங்குடி||
||கும்பகோணம்|| 
||இருபத்தி இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1338 - பெரிய திருமொழி - 4.10.1
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒரு கால்*
ஆல் இலை வளர்ந்த எம் பெருமான்*
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப்*
பெரு நிலம் அளந்தவன் கோயில்* 
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்* எங்கும் ஆம் பொழில்களின் நடுவே*
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்* திருவெள்ளியங்குடி அதுவே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1339 - பெரிய திருமொழி - 4.10.2
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு*
அரக்கர்தம் சிரங்களை உருட்டி*
கார் நிறை மேகம் கலந்தது ஓர் உருவக்* கண்ணனார் கருதிய கோயில்* 
பூ நிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி* பொதும்பிடை வரி வண்டு மிண்டி*
தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும்* திருவெள்ளியங்குடி அதுவே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1340 - பெரிய திருமொழி - 4.10.3
கடு விடம் உடைய காளியன் தடத்தைக்* கலக்கி முன் அலக்கழித்து* 
அவன் தன் படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப்* 
பல் நடம் பயின்றவன் கோயில்* 
பட அரவு அல்குல் பாவை நல்லார்கள்* பயிற்றிய நாடகத்து ஒலி போய்*
அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும்* திருவெள்ளியங்குடி அதுவே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1341 - பெரிய திருமொழி - 4.10.4
கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த* காளமேகத் திரு உருவன்*
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற* பரமனார் பள்ளிகொள் கோயில்* 
துறைதுறைதோறும் பொன் மணி சிதறும்* 
தொகு திரை மண்ணியின் தென்பால்*
செறி மணி மாடக் கொடி கதிர் அணவும்* திருவெள்ளியங்குடி அதுவே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1342 - பெரிய திருமொழி - 4.10.5
பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து* பாரதம் கையெறிந்து* 
ஒரு கால் தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த*
செங் கண் மால் சென்று உறை கோயில்* 
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி*
எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி*
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற* திருவெள்ளியங்குடி அதுவே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1343 - பெரிய திருமொழி - 4.10.6
காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை உறக்* கடல் அரக்கர்தம் சேனை*
கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த* கோல வில் இராமன்தன் கோயில்* 
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள்* ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி*
சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ்* திருவெள்ளியங்குடி அதுவே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1344 - பெரிய திருமொழி - 4.10.7
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த* மாவலி வேள்வியில் புக்கு*
தெள்ளிய குறள் ஆய் மூவடி கொண்டு* திக்கு உற வளர்ந்தவன் கோயில்* 
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள்* 
அரி அரி என்று அவை அழைப்ப*
வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான்* 
திருவெள்ளியங்குடி அதுவே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1345 - பெரிய திருமொழி - 4.10.8
முடி உடை அமரர்க்கு இடர் செய்யும்* அசுரர் தம் பெருமானை* 
அன்று அரி ஆய் மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட*
மாயனார் மன்னிய கோயில்* 
படியிடை மாடத்து அடியிடைத் தூணில்* பதித்த பல் மணிகளின் ஒளியால்*
விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய* திருவெள்ளியங்குடி அதுவே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1346 - பெரிய திருமொழி - 4.10.9
குடி குடி ஆகக் கூடி நின்று அமரர்* குணங்களே பிதற்றி நின்று ஏத்த*
அடியவர்க்கு அருளி அரவுஅணைத் துயின்ற* 
ஆழியான் அமர்ந்து உறை கோயில்* 
கடி உடைக் கமலம் அடியிடை மலரக்* கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய*
வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும்* வயல் வெள்ளியங்குடி அதுவே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1347 - பெரிய திருமொழி - 4.10.10
பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால்* பார் இடந்து எயிற்றினில் கொண்டு*
தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற* திருவெள்ளியங்குடியானை*
வண்டு அறை சோலை மங்கையர் தலைவன்* 
மான வேல் கலியன் வாய் ஒலிகள்*
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்* ஆள்வர் இக் குரை கடல் உலகே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Monday, 29 January 2024

108 திவ்ய தேசங்கள் - 022 - திருவெள்ளியங்குடி 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||022. திருவெள்ளியங்குடி||
||கும்பகோணம்|| 
||இருபத்தி இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் – 10 பாசுரங்கள்

001. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் – 1338 - 1347  - நான்காம் பத்து - பத்தாம் திருமொழி 

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி 

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
கால் அளவும் போதாக் கடல் ஞாலத் தோர் கற்ற*
நூல் அளவே அன்றி நுவல்வார் ஆர் கோலப்*
பரு வெள்ளி அம் குடியான் பாதக ஊண் மாய்த்த*
திரு வெள்ளியங் குடியான் சீர்|

  • கோலம் பரு வெள்ளி அம் குடியான் - அழகிய பெரிய கைலாசம் என்னும் வெள்ளி மலையை வாழும் இடமாக உடையனான சிவபிரானது
  • பாதகம் ஊண் - பிரமஹத்தியாகிய பாவத்தினால் நேர்ந்த இரந்துண்ணுதலை
  • மாய்த்த - ஒழித்தருளிய
  • திருவெள்ளியங்குடியான் - திருவெள்ளியங்குடி என்னும் தலத்தில் எழுந்தருளிய எம்பெருமானது
  • சீர் - சிறப்பை
  • கால் அளவும் போதா கடல் ஞாலத்தோர் - திரிவிக்கிரம அவதார காலத்தில் எம்பெருமானது ஒரு திருவடியினால் அளவிடுதற்கும் போதாத கடல் சூழ்ந்த நில உலகத்தில் உள்ளவர்களில்
  • நூல் அளவே அன்றி - கற்ற தாம் படித்தறிந்த நூல்களின் அளவாகக் கூறுவதே அல்லாமல்
  • நுவல்வார் - முழுதும் உணர்ந்து சொல்ல வல்லவர்
  • ஆர் - யாவருளர்?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Thursday, 25 January 2024

108 திவ்ய தேசங்கள் - 022 - திருவெள்ளியங்குடி 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||022. திருவெள்ளியங்குடி||
||கும்பகோணம்|| 
||இருபத்தி இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ கோலவில்லி ராமர் திருக்கோயில்||

||ஸ்ரீ மரகதவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ கோலவில்லி ராமர் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - கோலவில்லி ராமன், க்ஷீராப்தி நாதன்
  • பெருமாள் உற்சவர் - சிருங்கார சுந்தரர் (தன்னை அழகு படுத்திக் கொள்வதில் இப்பெருமானுக்கு விருப்பம் அதிகம்)
  • தாயார் மூலவர் - மரகதவல்லி
  • தாயார் உற்சவர் - ஸ்ரீதேவி, பூதேவி
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு
  • திருக்கோலம் - புஜங்க ஸயனம்
  • புஷ்கரிணி/தீர்த்தம் - சுக்கிர, பிரம்ம, பரசுராம, இந்திர 
  • விமானம் - புஷ்கலா வர்த்தக 
  • ஸ்தல விருக்ஷம் - செவ்வாழை
  • ப்ரத்யக்ஷம் - சுக்ரன், பிரமன், பராசரர், இந்திரன், மயன், மார்கண்டேயன், பூமிதேவி
  • ஆகமம் - வைகாநஸம்
  • ஸம்ப்ரதாயம் - வட கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

இத்தலத்தின் அருகில் சேங்கானூர் என்ற ஊர் உள்ளது. இது தான் வைணவ மேதை பெரியவாச்சான் பிள்ளையின் அவதார தலமாகும். காஞ்சிப் பெரியவர் இத்தலத்தில் தங்கி கோயில் திருப்பணி செய்துள்ளார். 

இந்த பெருமாளை தரிசித்தால் 108 திருப்பதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தனக்கு கண்ணில் ஒளி தந்த பெருமாளுக்கு நன்றி செலுத்தும் வகையில், சுக்கிர பகவான் அணையா தீபமாக இத்தலத்தில் இரவு பகலாக பிரகாசித்து கொண்டிருக்கிறார். எனவே இத்தலம் நவக்கிரகத்தில் சுக்கிரத் தலமாக போற்றப்படுகிறது. பெருமாளின் 108 திருப்பதிகளுள் இங்கு மட்டும் தான் கருடாழ்வார் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்து வரும் காட்சியை இன்றும் காணலாம். இத்தலத்தில் உள்ள பெருமாள் கிழக்கு நோக்கி, பள்ளி கொண்ட கோலத்தில் வர்ணம் பூசப்பட்ட நிலையில் அருள் பாலிக்கிறார். 

மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது இறைவன் என்பதை அறியாத மன்னன் தாரை வார்த்து கொடுக்க சம்மதிக்கிறான். ஆனால், உண்மை நிலை அறிந்த அசுர குல குரு சுக்ராச்சாரியார், தாரை வார்க்கும் செம்புக் குடத்தின் துவாரத்தை ஒரு வண்டாக உருவெடுத்து அடைத்து விட்டார். குருவின் இந்த செயல் அறிந்த பகவான் ஒரு குச்சியால் துவாரம் வழியாக குத்த, ஒரு கண்ணை இழக்கிறார் சுக்கிரன். ஒளியிழந்த கண்ணுடன் பல தலங்களுக்கு சென்று வழிபட்டு கடைசியாக இத்தலத்து பெருமாளை வழிபட்டு மீண்டும் பார்வை பெற்றார். இதனால் தான் இத்தலம் வெள்ளியங்குடி (சுக்கிரன்) என அழைக்கப் படுகிறது. சுக்கிரன் இத்தலத்தில் வந்து தவம் செய்வதற்கு மற்றொரு காரணமும் உண்டு. தேவ சிற்பியான விஸ்வகர்மா பெருமாளுக்கு அழகாக கோயில்களை கட்டி முடித்தார். இதே போல் தன்னால் கோயில்கள் கட்ட முடியவில்லையே என அசுர குல சிற்பி மயன் வருத்தப் பட்டு பிரம்மனிடம் வேண்டினார். அதற்கு பிரம்மா இத்தலத்தில் கடும் தவம் செய்தால் பெருமாள் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்,'' என கூறினார். மயனின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் சங்கு சக்ரதாரியாக காட்சி கொடுத்தார். ஆனால் மயன், "தனக்கு இந்த தரிசனத்திற்கு பதில், ராமாவதார காட்சி வேண்டும் என்றான். தன் கரத்திலிருந்த சங்கு சக்கரத்தை கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு கோலவில்லி ராமனாக வில் அம்புகளுடன் தரிசனம் தந்தார் பகவான். இப்படிப்பட்ட பெருமைக்குரிய தலத்தில் தவமிருக்க விரும்பி இங்கு வந்தார் சுக்ராச்சாரியார். இதன் காரணமாகவும் இது "வெள்ளியங்குடி' ஆயிற்று.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்