About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 2 January 2026

திவ்ய ப்ரபந்தம் - 138 - பெரியாழ்வார் திருமொழி - 2.2.11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||திவ்ய ப்ரபந்தம் - 138 - செங்கண்மால் சிந்தை பெறுவர்||
||பெரியாழ்வார் திருமொழி||
||இரண்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - பதினொன்றாம் பாசுரம்||

வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி* 
மாதவா! உண் என்ற மாற்றம்* 
நீர் அணிந்த குவளை வாசம்* 
நிகழ நாறும் வில்லிபுத்தூர்ப்*
பார் அணிந்த தொல் புகழான்* 
பட்டர்பிரான் பாடல் வல்லார்* 
சீர் அணிந்த செங்கண்மால் மேல்* 
சென்ற சிந்தை பெறுவர் தாமே| (2)

  • வார் அணிந்த - மார்பு கச்சை அணிந்து கொண்டிருக்கிற
  • கொங்கை - ஸ்தநங்களை உடைய
  • ஆய்ச்சி - ஆய்ச்சி யசோதை
  • மாதவா - மாதவனே!
  • உண் - பாலைப் பருகுவாயாக
  • என்ற - என்று வேண்டிச் சொன்ன
  • மாற்றம் - வார்த்தையைக் குறித்தனவான
  • நீர் அணிந்த - நீர் நிலையை அழகுடையதாகச் செய்கிற
  • குவளை - செங்கழுநீர் நிலைககளின்
  • வாசம் - நல்ல வாசனை
  • நிகழ் நாறும் - ஒரே மாதிரியாக எப்போதும் வீசுகின்ற
  • வில்லிபுத்தூர் - ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவரும்
  • பார் அணிந்த - பூமி முழுவதும் அழகாகப் பரவிய
  • தொல் புகழான் - பழமையான கீர்த்தியை உடையவருமான
  • பட்டர்பிரான் - பெரியாழ்வார் அருளிச் செய்த
  • பாடல் - பாசுரங்களை
  • வல்லார் - பாட வல்லவர்
  • சீர் - கல்யாண குணங்களை
  • அணிந்த - அணிகலனாகக் கொண்ட
  • செம் கண் - சிவந்த திருக் கண்களை உடைய
  • மால் மேல் - திருமாலிடத்தில்
  • சென்ற - பதிந்த
  • சிந்தை - மநஸ்ஸை
  • பெறுவர் தாமே - அவர்கள் பெறுவார்கள்

மாதவனே! 'என் முலைப்பாலை உண்பாயாக', என்று கச்சையணிந்த முலைகளை உடைய யசோதை சொன்ன வார்த்தைகளை, நல்ல வாசனையுடன் திகழும் செங்கழுநீர் நிலைகள் நிரம்பிய ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்து உலகப் புகழ் எய்திய பெரியாழ்வார் அருளிச்செய்த இப்பாசுரங்களை பாட வல்லவர்கள், குணங்களையே பூஷணமாக உள்ளவனும், சிவந்த அழகிய கண்களை உடையவனுமான திருமாலிடம் பக்தி செலுத்தும் மனதை அடைவார்கள்.

அடிவரவு: அரவணையாய் வைத்த தந்தம் கஞ்சன் தீய மின் பெண்டிர் இருமலை அங்கமலம் ஓட வாரணிந்த - போய்ப்பாடு

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment