1. ஆதி³லக்ஷ்மி
பாற்கடலைக் கடைந்த போது தோன்றியவள். இவ்வடிவம் தேவி என்றும் நிலைத்திருப்பவள் என்பதனைக் குறிக்கிறது. இவ்வம்மை மஞ்சள் பட்டு அணிந்து அழகிய கிரீடத்துடன் காட்சியளிக்கிறாள். இவளுக்கு நான்கு கரங்கள் உள்ளன. ஆதி என்பதற்கு ‘முதல்’ என்று பொருள். திருப்பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது முதலில் நஞ்சு வந்தது. பின் காமதேனு, சந்திரன் என வந்தார்கள். அப்போது தோன்றிய முதல் லக்ஷ்மியே ஆதி லக்ஷ்மி. ஒவ்வொரு லக்ஷ்மிக்கும், பெயரைப் பொறுத்து ஒவ்வொரு குணம் உண்டு. ஆனால் ஆதிலக்ஷ்மிக்கு அப்படியில்லை. ஏனென்றால், அவளுக்குப் பெயரிட வேண்டிய அவசியமில்லாமல் அவள் மாத்திரமே இருந்தாள். ஆதிலக்ஷ்மியின் திருப்பாதத்திற்குக் கீழ் பூர்ணகும்பம், கண்ணாடி, சாமரம், கொடி, பேரிகை, விளக்கு, ஸ்வஸ்திகம் போன்ற அபூர்வ மங்கள அம்சங்கள் அமையப் பெற்றிருக்கும். அவள் பொற்பாதங்கள் பற்றியவர்களுக்கு மங்களம் சிறக்கும் என்பதனால் அவளை வழிபட்டுப் பேறு பெற வேண்டியது முக்கியம்.
ஸுமனஸ வந்தி³த ஸுந்த³ரி மாத⁴வி, சந்த்³ர ஸஹொத³ரி ஹேம மயே
முனிக³ண வந்தி³த மோக்ஷ ப்ரதா³யனி, மஞ்ஜுல பா⁴ஷிணி வேத³னுதே|
பங்கஜ வாஸினி தே³வ ஸுபூஜித, ஸத்³கு³ண வர்ஷிணி ஸா²ந்தியுதே
ஜய ஜய ஹே மது⁴ஸூத³ன காமினி, ஆதி³லக்ஷ்மி பரிபாலய மாம்||
தேவர்களால் வணங்கப் படுபவளே, அழகானவளே, மாதவனின் மனைவியே, சந்திரனின் சகோதரியே, பொன் மயமானவளே, முனிவர்களால் போற்றப் படுபவளே, மோட்சத்தை அளிப்பவளே, இனிமையை அருள்பவளே, வேதங்களால் துதிக்கப் படுபவளே, தாமரை மலரில் வசிப்பவளே, சாந்தியோடு கூடியவளே, மதுசூதனனின் மனைவியே, மகாலக்ஷ்மியின் முதல் உருக் கொண்ட ஆதிலக்ஷ்மியே, என்னை எப்போதும் காப்பாற்ற வேண்டும். எப்பொழுதும் நலன் அருள்வாய்! எனத் துதிக்க எக்காரியமும் தடை, தாமதம் இல்லாமல் நிச்சயமாக முழு வெற்றியுடன் நடக்க ஸ்ரீ ஆதி லக்ஷ்மி நமக்கு அருள் புரிவாள்.
2. தா⁴ன்யலக்ஷ்மி
தானிய வளங்களை அருள்பவள் தான்யலக்ஷ்மி. தானிய வகைகள், உணவுப் பொருட்கள், பழம், கீரை வகைகள் ஆகிய அனைத்து வளங்களையும் உருவாக்குபவள் தான்யலக்ஷ்மி. இவளுக்கு அன்னலக்ஷ்மி என்ற பெயரும் உண்டு. திருமாலைப் பச்சைமால் என்பர். அவர் நிறத்திற்குக் காரணம் தான்ய லக்ஷ்மியேயாகும். அவள் உலகப் பசுமைக்குத் தலைவி. ஆறு திருக்கரங்களைக் கொண்டவள். வலப்புறம் தானிய நெற்கதிர், அபய முத்திரை, அம்பு முதலியவற்றைக் கொண்டும், இடப்புறம் வில், கரும்பு, வரத முத்திரை முதலியவற்றைக் கொண்டும் விளங்குபவள். யானையைப் பீடமாகக் கொண்டவள். லக்ஷ்மி தந்திரம் என்னும் நூலில் தான்யலக்ஷ்மி சதாக்க்ஷி, சாகம்பரி எனப்போற்றப்படுகிறாள். உலகம் மழை நீர் இல்லாமல் வாடும் என்பதினால் நூறு கண்களால் நீர் வளத்தைப் பெருக்குகிறாள் என்ற பொருள் பட சதாக்ஷி எனவும், உணவுப் பொருட்களை உருவாக்குகிறாள் என்பதனால் சாகம்பரி எனவும் அழைக்கப்படுகிறாள்.
அயிகலி கல்மஷ நாஸி²னி காமினி, வைதி³க ரூபிணி வேத³மயே
க்ஷீர ஸமுத்³ப⁴வ மங்கள³ ரூபிணி, மந்த்ரனி வாஸினி மந்த்ரனுதே|
மங்கள³ தா³யினி அம்பு³ஜ வாஸினி, தே³வ க³ணாஸ்²ரித பாத³யுதே
ஜய ஜய ஹே மது⁴ஸூத³ன காமினி, தா⁴ன்யலக்ஷ்மி ஸதா³பாலய மாம்||
பாவங்களை அழிப்பவளே, அழகியே, வேத உருவானவளே, வேத மயம் ஆனவளே, பாற்கடலில் தோன்றிய மங்கல வடிவே, மந்திரங்களில் வாழ்பவளே, மந்திரங்களினால் வழிபடப் பெறுகிறவளே, நலமனைத்தும் அளிப்பவளே, தாமரையில் வாசம் செய்பவளே, தேவர்கள் புகலாகக் கொண்ட திருவடிகள் வாய்த்தவளே, மதுசூதனின் மனைவியே, தான்யங்களில் உறைந்து உலக உயிர்களை நிலைபெறச் செய்பவளே, தான்ய லக்ஷ்மியே, எனக்கு எப்பொழுதும் வளமளித்து காப்பாற்றுவாயாக! எனக் கூறி ஸ்ரீ தான்ய லக்ஷ்மியை வணங்கி வழிபட்டால், தோட்ட, வயல்களில் தான்யங்கள் செழித்து வளர்ந்து களஞ்சியத்தில் எல்லாவித தான்யங்களும் நிறையும். வாழ்வில் உணவுப் பஞ்சமே இருக்காது.
3. தை⁴ர்யலக்ஷ்மி
மனத்திற்கு தைரியத்தை தருபவள் வீரலக்ஷ்மி என்ற தைரியலக்ஷ்மி. வாழ்வின் இன்பம், துன்பம் ஆகியவற்றை சமமாக பாவிக்கும் நிலையை அருளும் சக்தி இவள். தெளிவான, அத்தியாவசியமான முடிவெடுக்க, அதற்கான முயற்சி மேற்கொள்ள மனதுக்கு உறுதியளித்து அச்சத்தைத் தவிர்த்து வெற்றியை அருள்பவள் இவள். எட்டுத் திருக்கரங்களைக் கொண்டவள். வலது திருக்கரங்களில் அபயம், சூலம், அம்பு, சக்கரம் முதலியவற்றையும், இடது திருக்கரங்களில் வரதம், கபாலம், வில், சங்கம் முதலியவற்றையும் கொண்டு விளங்குபவள். தாமரைப் பூவின் மீது வீற்றிருப்பாள். உருக்கிய பொன் போன்ற நிறத்தினை உடையவள், உயர் கிரீடத்தை உடையவள். தங்கநிற ரவிக்கை அணிந்தவள். எல்லாருக்கும் உறுதியான மனோதிடத்தை அருள்பவள்.
ஜயவர வர்ஷிணி வைஷ்ணவி பா⁴ர்க³வி, மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே
ஸுரக³ண பூஜித ஸு²க்⁴ர ப²லப்ரத,³ ஜ்ஞான விகாஸினி ஸா²ஸ்த்ரனுதே|
ப⁴வப⁴ய ஹாரிணி பாப விமோசனி, ஸாது⁴ ஜனாஸ்²ரித பாத³யுதே
ஜய ஜய ஹே மது⁴ ஸூத⁴ன காமினி, தை⁴ர்யலக்ஷ்மீ பரிபாலய மாம்||
பிருகு முனிவரின் மகளே, மந்திர ரூபிணியே, மந்திர மயமானவளே, தேவர் கூட்டம் வழிபடும் அருட்சக்தியே, ஞான மலர்ச்சியுடையவளே, சாத்திரங்கள் போற்றும் புனித மகளே, இவ்வுலகில் ஏற்படும் பயங்களை நீக்குபவளே, பாவத்தைப் போக்குபவளே, மதுசூதனின் மனைவியே, நின்னருளால் எனது எல்லாப் பயமும் போகட்டும். தைரிய லக்ஷ்மியே, எனக்கு எப்பொழுதும் தைரியம் அளித்துக் காப்பாற்ற வேண்டும், என்று பக்தியுடன் கூறி வந்தால் மன உறுதியையும், துணிச்சலையும், வீரத்தையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், ஸ்ரீ தைர்ய லக்ஷ்மி அளிப்பாள்.
4. கஜ³லக்ஷ்மி
இவளே ராஜலக்ஷ்மி என்றும் அழைக்கப்படுகிறாள். இத்தேவியின் கருணையினாலே இந்திரன் கடலுக்கு அடியில் இருந்த இந்திரலோகத்தைத் திரும்பப் பெற்றான். ‘கஜம்’ என்றால் யானை. இருபுறமும் யானைகள் கலசம் ஏந்தித் திருமஞ்சனம் செய்வது போல் அமர்ந்திருப்பதால் கஜலக்ஷ்மி என்று பெயர். நிலத்திற்கு செழுமையான நீர் தேவை என்பதால் நீர் கொண்ட மேகங்கள் யானைகளாகி, நில மகளாகிய இலக்குமியின் மீது அபிஷேகிப்பதை இவ்வுருவம் குறிக்கிறது என்பார்கள். கஜலக்ஷ்மியை ராஜலக்ஷ்மி, ஐஸ்வர்ய லக்ஷ்மி எனவும் அழைப்பர். கஜலக்ஷ்மியின் உருவத்தை வீட்டு நிலை வாசற்படியில் காணலாம்.
ஜய ஜய து³ர்க³தி நாஸி²னி காமினி, ஸர்வ ப²லப்ரத³ ஸா²ஸ்த்ரமயே
ரத⁴கஜ³ துரக³ பதா³தி ஸமாவ்ருத, பரிஜன மண்டி³த லோகனுதே|
ஹரி ஹர ப்³ரஹ்ம ஸுபூஜித ஸேவித, தாப நிவாரிணி பாத³யுதே
ஜய ஜய ஹே மது⁴ஸூத³ன காமினி, கஜ³லக்ஷ்மீ ரூபேண பாலய மாம்||
தீவினைகள் அழிக்கும் அழகியே, எல்லாப் பயன்களையும் அருள்பவளே, சாத்திரமயமானவளே, தேர், யானை, புரவி, காலாள் சூழப் பணியாட்களும், மக்களும் துதிக்க விளங்குபவளே, அரியும், அரனும், பிரம்மனும் வணங்க நிற்பவளே, மழை பொழிய அருள்பவளே, தாபங்களைத் தீர்க்கும் திருவடியினை உடையவளே, மதுசூதனன் மனைவியே, கஜலக்ஷ்மியே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும், என வேண்டி கஜ லக்ஷ்மியை வழிபட்டால் வாழ்வில் எல்லாவித ஐஸ்வர்யங்களையும் பெறலாம். வாழ்க்கை என்றும் ஆனந்தமாக இருக்கும்.
5. ஸந்தானலக்ஷ்மி
சந்தானம் என்றால் மழலைச் செல்வம் என்று பொருள். ஒரு வம்சம் தழைத்து வளர மழலைச் செல்வம் இன்றியமையாதது. மற்ற செல்வங்களைவிட சிறந்த செல்வம் குழந்தைச் செல்வம் ஆகும். அத்தகைய மழலைச் செல்வத்தை வழங்குபவள், சந்தானலக்ஷ்மி. ஆறு திருக்கரங்களுடன் தலையில் பின்னலாகிய சடையுடன் குழந்தையை மடியில் இருத்தி அருள்பாலிக்கும் தோற்றம் கொண்டவள். சடையுடன் கிரீடத்தை சூடியவளாக, வரத அபயத் திருக்கரங்களுடன் கத்தி, கேடயம் ஆகிய ஆயுதங்களைத் தரித்து காட்சி தருகிறாள். இவளது பீடத்தில் சாமரம் வீசியவாறும், விளக்கினைக் கையில் ஏந்திய வண்ணமும் இரு கன்னிப் பெண்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். பிள்ளை பாக்கியம் பித்ருக்களைக் கடைத்தேற்றும் என்பது இந்து மத நம்பிக்கை.
அயிக²க³ வாஹினி மோஹினி சக்ரிணி, ராக³ விவர்தி⁴னி ஜ்ஞானமயே
கு³ணக³ண வாரதி⁴ லோக ஹிதைஷிணி, ஸ்வர ஸப்த பூ⁴ஷித கா³னநுதே|
ஸகல ஸுராஸுர தே³வ முனீஸ்²வர, மானவ வந்தி³த பாத³யுதே
ஜய ஜய ஹே மது⁴ஸூத³ன காமினி, ஸந்தானலக்ஷ்மீ த்வம் பாலய மாம்||
கருடனை வாகனமாகக் கொண்ட மோகினியே, சக்கரம் தாங்கி அன்பர்களைக் காத்து அன்பை வளர்ப்பவளே, அறிவு மயமானவளே, உயர் நலமுடையவளே, உலகனைத்தும் நலம்பெற அருள்பவளே, ஏழிசைக் கானத்தினால் துதிக்கப் படுபவளே, சூரரும் அசுரரும் தேவரும் முனிவரும் மாந்தரும் பணிந்து துதிக்கும் இணையடி வாய்ந்தவளே, இம்மைக்கு மட்டும் இல்லாமல் மறுமைக்கும் வாழ்வளிக்கும் சந்தானத்தை அருள்பவளே, மதுசூதனன் மனைவியே, சந்தான லக்ஷ்மியே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும், என வேண்டிட, செல்வத்தில் சிறந்த செல்வமாகிய குழந்தைச் செல்வத்தை குறையின்றியும், தடையின்றியும் அளித்து, ஜாதகத்தில் உள்ள புத்ர தோஷத்தையும் ஸ்ரீ ஸந்தான லக்ஷ்மி நீக்கி அருள் புரிவாள்.
6. விஜயலக்ஷ்மி
விஜயம் என்றால் வெற்றி என்று பொருள். வெற்றியை அருள்பவள் விஜயலக்ஷ்மி. எடுத்த காரியங்களில் வெற்றிபெறச் செய்பவள். விஜயலக்ஷ்மிக்கு வெற்றித் திருமகள் என்ற பெயரும் உண்டு. தன் திருக்கரங்களில் வாள், சார்ங்கம், சுதர்சன சக்ரம், சங்கு, கத்தி, கேடயம், அபயம், வரதம் போன்றவற்றைத் தரித்து அன்னத்தின் மீது அமர்ந்தருளும் கோலம் கொண்டவள்.
ஜய கமலாஸினி ஸத்³க³தி தா³யினி, ஜ்ஞான விகாஸினி கா³னமயே
அனுதி³ன மர்சித குங்கும தூ⁴ஸர, பூ⁴ஷித வாஸித வாத்³யனுதே|
கனக த⁴ராஸ்துதி வைப⁴வ வந்தி³த, ஸ²ங்கர தே³ஸி²க மான்யபதே³
ஜய ஜய ஹே மது⁴ஸூத³ன காமினி, விஜயலக்ஷ்மீ ஸதா³ பாலய மாம்||
தாமரை மலரில் பொலிபவளே, நற்கதியளிப்பவளே, ஞானம் வளர்ப்பவளே, கான மயமானவளே, வெற்றியைக் குறைவின்றி நல்குபவளே, அனுதினமும் குங்குமத்தினாலும், மலர்களினாலும், அர்ச்சனை பெறுபவளே, வாத்தியங்கள் முழங்க, சங்கர பகவத் பாதாள் கனகதாரா துதி பாட, அவருக்கு அருளியதன் மூலம் பெருமையளித்தவளே, மதுசூதனின் மனைவியே, வெற்றித் திருமகளே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும், என பக்தியுடன் கூறி ஸ்ரீ விஜய லக்ஷ்மி தேவியை வழிபட்டால் நம் வாழ்வில் தோல்வி, ஏமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்கும் எதிலும் வெற்றிதான்.
7. வித்³யாலக்ஷ்மி
வித்யை என்பதற்குக் கல்வி என்று பொருள். கல்விச் செல்வத்தை வழங்குவதனால் இவளுக்கு வித்யாலக்ஷ்மி என்று பெயர். கலைமகள் மற்றும் அலைமகள் சேர்ந்த வடிவம் இவள். கல்வி, அறிவு, திறமை ஆகியவற்றை அருள்பவள். ஸ்ரீஜெயாகிய சம்ஹிதையில் ‘வாகீஸ்வரி’ (நாமகள்) என்று விளக்கப்பட்டுள்ளது. அதிகமான வெண்மை உருவுடையவள். சங்க, பத்ம, வரத, அபய அஸ்தங்களுடன் கூடியவள், நூல்களை இயற்றிக் கொண்டிருக்கும் நாத சொரூபமானவள் என்று குறிப்பிடப்படுகிறது. ‘லக்ஷ்மி தந்திரம்’ என்னும் நூல் சகல ஞான சம்பத்துக்களையும் ஆற்றலையும் அருள்பவள் எனக்கூறுகிறது.
ப்ரணத ஸுரேஸ்²வரி பா⁴ரதி பா⁴ர்க³வி, ஸோ²கவினாஸி²னி ரத்னமயே
மணிமய பூ⁴ஷித கர்ண விபூ⁴ஷண, ஸா²ந்தி ஸமாவ்ருத ஹாஸ்யமுகே²|
நவனிதி⁴ தா³யினி கலிமல ஹாரிணி, காமித ப²லப்ரத³ ஹஸ்தயுதே
ஜய ஜய ஹே மது⁴ஸூத³ன காமினி, வித்³யாலக்ஷ்மீ ஸதா³ பாலய மாம்||
தேவர்கள் துதிக்கும் தலைவியே, கலைமகளுக்குத் தலைவியே, பிருகு முனிவரின் திருமகளே, துயரம் தீர்ப்பவளே, ரத்தின மயமானவளே, நவமணி பதித்த குண்டலம் அணிந்தவளே, அமைதி நிலவும் புன்னகை முகத்தை உடையவளே, கலியுக பாவங்களைத் தொலைப்பவளே, வேண்டியோர் விரும்பியவுடன் கலைகளை அருளிப் பயன்களை வழங்கும் திருக்கரங்களை உடையவளே, மதுசூதனின் மனைவியே, வித்யா லக்ஷ்மியே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும் என வேண்டினால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
8. த⁴னலக்ஷ்மி
தனம் என்பது பணம் அல்லது தங்கத்தைக் குறிக்கும். பணம் நாம் சுக வாழ்வு வாழ மிகவும் அவசியம். இத்தேவியே வைபவ லக்ஷ்மி என்றும் அழைக்கப் படுகிறாள். தனலக்ஷ்மியின் அருளால் செல்வங்கள் குவிகின்றன என்று நிகமாந்த தேசிகன் கூறியுள்ளார். தன் திருக்கரங்களில் சங்கு, சக்கரம், பச்சிலை, கெண்டி, வில், அம்பு போன்றவற்றை ஏந்தி பத்மபீடத்தில் பொலிபவள்.
தி⁴மி தி⁴மி தி⁴ந்தி⁴மி தி⁴ந்தி⁴மி தி³ந்தி⁴மி, து³ந்து⁴பி⁴ நாத³ ஸுபூர்ணமயே
கு⁴ம கு⁴ம கு⁴ங்கு⁴ம கு⁴ங்கு⁴ம கு⁴ங்கு⁴ம, ஸ²ங்க³ நினாத³ ஸுவாத்³யனுதே|
வேத³ பூராணே திஹாஸ ஸுபூஜித, வைதி³க மார்க³ ப்ரத³ர்ஸ²யுதே
ஜய ஜய ஹே மது⁴ஸூத³ன காமினி, த⁴னலக்ஷ்மி ரூபேணா பாலய மாம்||
‘திமி திமி திந்திமி திந்திமி திந்திமி என்று துந்துபி முழங்கப் பூரண வடிவானவளே, குமகும குங்கும எனச் சங்கம் இனிமையோடு முழங்க, வேதங்களும், புராணங்களும் துதித்துப் போற்ற, வேத வழியில் நன்னெறி காட்டுபவளே, மதுசூதனின் ஆபரணமே, உன்னைத் தரித்திருப்பதால் நாராயணனும் பெருமை பெற்று விளங்குகிறான். எம்மைக் காத்து வாழ்விப்பவள் நீயே,’ என்று சொல்லி வழிபட்டால், நல்லவழியாகிய தர்ம நெறியில் நம் தேவைக்கேற்ப செல்வத்தை சம்பாதித்து பொருள் வளத்துடன் வாழ ஸ்ரீ தன லக்ஷ்மி அருள் புரிவாள்.
ப²லஸ்²ருதி
ஸ்²லோ|அஷ்டலக்ஷ்மீ நமஸ்துப்⁴யம் வரதே³ காம ரூபிணி
விஷ்ணு வக்ஷ: ஸ்த²லா ரூடே⁴ ப⁴க்த மோக்ஷ ப்ரதா³யினி|
ஸ்²லோ| ஸ²ங்க³ சக்ர க³தா³ஹஸ்தே விஸ்²வரூபிணிதே ஜய:
ஜக³ன் மாத்ரே ச மோஹின்யை மங்கள³ம் ஸு²ப⁴ மங்கள³ம்|