||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||விதுர மைத்ரேய ஸம்வாதம் - 45||
||ஸ்கந்தம் 04||
தொடர்ந்து கர்தம ப்ரஜாபதியின் பெண்களின் வம்சங்களைச் சொன்னார் மைத்ரேயர்.
சிரத்தா என்ற பெண்ணை ஆங்கீரஸுக்கு மணம் முடித்தார் கர்தமர். அவர்களுக்கு ஸினீவாலி, குஹூ, ராகா, அனுமதி என்று நான்கு பெண்கள்.
ஸினீவாலி என்பவள் தேய்பிறை சதுர்தசிக்கும், குஹூ அமாவாசைக்கும், ராகா பௌர்ணமிக்கும், அனுமதி வளர்பிறை சதுர்தசிக்கும் அதிதேவதைகள்.
இவர்களைத் தவிர, பகவானைப் போன்ற பெருமை உடைய உதத்யர் என்பவரும், தேவகுரு ப்ருஹஸ்பதியும் ஆங்கீரஸின் புதல்வர்கள் ஆவர். அவர்கள் ஸ்வாரோசிஷ மன்வந்தரத்தில் புகழ் பெற்று விளங்கினர்.
ஹவிர்புக் என்ற கர்தமரின் மகளை புலஸ்தியர் மணந்தார். இவர்களின் மகன்கள் அகஸ்தியரும், விச்ரவஸ் என்பவரும் ஆவர்.
விச்ரவஸின் மனைவியான இடபிடை என்பவளிடம் யக்ஷர்களின் தலைவரான குபேரன் பிறந்தார். இன்னொரு மனைவியான கைகஸி என்பவளின் புதல்வர்களே ராவணன், கும்பகர்ணன், மற்றும் விபீஷணன் ஆகியோர்.
க்ரது என்பவரின் மனைவி க்ரியை. இவள் ப்ரும்மதேஜஸுடன் விளங்கும் வாலகில்யர்கள் என்னும் அறுபதினாயிரம் முனிவர்களைப் பெற்றாள்.
வசிஷ்டரின் மனைவியான ஊர்ஜை அல்லது அருந்ததி சித்ரகேது முதலான ஏழு மகன்களை ஈன்றாள். அவர்கள் ஸப்தரிஷிகள் ஆனார்கள்.
ஸப்தரிஷி என்பதும் பதவிகளே. ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு மஹரிஷிகள் ஸப்தரிஷிகளாக இருக்கின்றனர். அவர்கள் சித்ரகேது, ஸுரோசி, விரஜன், மித்ரன், உல்பணன், வஸுப்ருத்யானன், த்யுமான் ஆகியோர்.
அதர்வா என்ற முனிவரின் பத்னி சித்தி என்பவள் ததீசி முனிவரைப் பெற்றாள். அவரை அசுவசிரஸ் என்றும் அழைப்பர்.
ப்ருகு மஹரிஷியின் மனைவி கியாதி என்பவள். அவள் தாதா, விதாதா ஆகிய இரு மகன்களையும் திருமகளின் அம்சமான லக்ஷ்மி என்ற மகளையும் பெற்றாள்.
மேரு மஹரிஷி ஆயதி, நியதி என்ற தன் புதல்விகளை தாதா, விதாதாவிற்கு மணம் செய்து கொடுத்தார்.
அவர்களுக்கு மிருகண்டு, பிராணன் என்ற புதல்வர்கள் உண்டு. மிருகண்டுவின் மகன் மார்க்கண்டேயர். பிராணனின் மகன் வேதசிரேயஸ். ப்ருகுவின் மற்றொரு புதல்வரான கவியின் மகன் உசனஸ் என்னும் சுக்ராசார்யார்.
விதுரா! இந்த ஒன்பது முனிவர்களும் ப்ரஜைகளைப் படைத்து உலகத்தைப் போஷித்தனர்.
இந்த வரலாற்றைச் சிரத்தையுடன் கேட்பவர்களின் பாவங்கள் உடனே நீங்கும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்



No comments:
Post a Comment