||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 128 - அரவணையான் ஆயரேறு
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்
அரவு அணையாய் ஆயர் ஏறே!*
அம்மம் உண்ணத் துயில் எழாயே*
இரவும் உண்ணாது உறங்கி நீ போய்*
இன்றும் உச்சி கொண்டதாலோ*
வரவுங் காணேன்; வயிறு அசைந்தாய்*
வன முலைகள் சோர்ந்து பாயத்*
திரு உடைய வாய் மடுத்துத்*
திளைத்து உதைத்துப் பருகிடாயே| (2)
- அரவு அணையாய்! - ஆதிசேஷன் மீது சயனிப்பவனே!
- ஆயர் ஏறே! - இடையர்களுக்குத் தலைவனே!
- அம்மம் உண்ண - பால் பருகுவதற்கு
- துயிலெழாயே! - தூக்கம் தெளிந்து படுக்கையிலிருந்து எழுந்திருக்க வேணும்
- இரவும் உண்ணாது - நீ நேற்று இரவும் பால் உண்ணாமல்
- உறங்கி நீ போய் - தூங்கிப் போனாய்
- உச்சி கொண்டது - பொழுது விடிந்து உச்சிப் போய் விட்டது
- வரவும் காணேன் - இருப்பினும் நீ எழுந்து வருவதைக் காணோம், உனக்குப் பசியில்லை என்றா
- வயிறு அசைந்தாய் - வயிறு தளர்ந்தாய்
- வன முலைகள் - எனது அழகிய முலைகள் உன் மேல் அன்பினால் நெறித்து
- சோர்ந்து பாய - பால் வடிந்து பெருகிக் கொண்டிருக்க
- வாய் மடுத்து - உன் வாயை வைத்து
- உதைத்து - கால்களாலே செல்லமாக உதைத்துக் கொண்டு
பாம்பைப் படுக்கையாகக் கொண்டவனும், இடையர்களின் தலைவனுமான கண்ணன் இரவு முழுதும் முலைப்பால் அருந்தாமலே உறங்கிவிட, பகலாகியும் பால் உண்ண வராமல் இருந்ததைக் கண்டு யசோதை, கண்ணா! விழித்துக் கொள்! நீயே எழுந்து வந்து, பால் நிரம்பிய என்னுடைய முலைகளில் உன் அழகிய திருவாயை பொருத்தி கால்களை உதைத்தவாறே பாலை நன்றாகப் பருக வேண்டும், என்கிறாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்