||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||040. திருச்சித்திரகூடம்||
||சிதம்பரம்||
||நாற்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||
||ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் திருக்கோயில்||
||ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ கோவிந்தராஜன் பெருமாள்||
||திருவடிகளே சரணம்||
- பெருமாள் மூலவர் - கோவிந்தராஜன், பார்த்தசாரதி, சக்கரவர்த்தி திருமகன்
- பெருமாள் உற்சவர் - தேவாதி தேவன்
- தாயார் மூலவர் - புண்டரீகவல்லி
- திருமுக மண்டலம் திசை - கிழக்கு
- திருக்கோலம் - போக ஸயனம்
- புஷ்கரிணி/தீர்த்தம் - புண்டரீக ஸாஸ்ஸு, 12 தீர்த்தங்கள்
- விமானம் - ஸாத்வீக
- ப்ரத்யக்ஷம் - சிவன், தில்லை மூவாயிரவர், வ்யாக்ர பாதர்
- ஆகமம் - வைகாநஸம்
- ஸம்ப்ரதாயம் - தென் கலை
- மங்களாஸாஸநம் - 2 ஆழ்வார்கள் (குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார்)
- பாசுரங்கள் - 32
--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி
--------------------
ஸ்தல புராணம்
மகாவிஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருக்கும் பிரம்மா நான்கு முகங்களுடன் அமர்ந்த கோலத்தில் தான் இருப்பார். ஆனால், இங்கு வித்தியாசமாக நின்ற கோலத்தில் இருக்கிறார். தன்னைப் படைத்த மகாவிஷ்ணு நடனப் போட்டிக்கு தீர்ப்புச் சொல்வதற்காக சபையில் இருந்த போது, அவருக்கு மரியாதை கொடுப்பதற்காக பிரம்மா நின்ற படியே இருந்தாராம். இதனை உணர்த்தும் விதமாக இங்கு பிரம்மா நின்ற கோலத்தில் இருக்கிறார் என்கின்றனர். பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமான இங்கு மகாவிஷ்ணு ஆகாயத்தை பார்த்த படி இருப்பது சிறப்பு. உற்சவர் தேவாதி தேவன் தாயார்களுடன் அமர்ந்த கோலத்திலும், மற்றோர் உற்சவர் சித்திரக் கூடத்துள்ளான் ஸ்வாமியின் பாதத்திற்கு அருகில் நின்ற கோலத்திலும் இருக்கின்றனர். சித்ர சபை எனப்படும் இக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு அருகிலே கோவிந்தராஜப் பெருமாள் கொடி மரத்துடன் தனிக்கோயில் மூலவராக இருக்கிறார். பெருமாள் சன்னதிக்கு முன் மண்டபத்தில் நின்று பார்த்தால் நடராஜர், கோவிந்தராஜர் மற்றும் அவரது நாபிக் கமலத்தில் இருக்கும் பிரம்மா ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது.
கவேரன் எனும் கலிங்க நாட்டு அரசனுக்கு லோபமுத்திரை எனும் மகள் இருந்தாள். லோப முத்திரையை திருமணம் செய்து கொண்ட அகத்தியர் அவளை காவிரி நதியாக மாற்றினார். அந்நதியில் தினமும் நீராடிய கவேரனும் அவன் மனைவியும் தங்கள் மகளிடம், முக்தியடைய வழி கேட்டனர். அவர்கள் முன் தோன்றிய காவிரி, "தில்லைநகர் சென்று பெருமாளை குறித்து தவம் செய்து வந்தால் அவர் தரிசனத்தால் முக்தி கிடைக்கும்," என்றாள். அதன்படி கவேரனும், அவன் மனைவியும் இத்தலத்திற்கு வந்து தவம் இருந்தனர். அவர்களுக்கு மகாவிஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தந்து மோக்ஷம் கொடுத்தார்.
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளை மெத்தையாக (அரவணை) இருந்து தாங்குபவர் ஆதிசேஷன். ஒரு சமயம் அவர் சிவனது திருவிளையாடல்களையும், அவரது தாண்டவங்களையும் கேட்டு தாண்டவ தரிசனம் செய்ய ஆர்வம் கொண்டார். எனவே, மகாவிஷ்ணு அவரை சிவனின் திருநடனம் காண அனுப்பி வைத்தார். பூலோகத்தில் வியாக்ர பாத மகரிஷியுடன் நட்பு கொண்ட அவர் இத்தலத்தில் நடராஜரின் திருநடனக் கோலத்தை தரிசித்தார். பின் கோவிந்த ராஜரை வணங்கி மோக்ஷம் பெற்று மீண்டும் பாற்கடல் திரும்பினாராம். இவர் பிரகாரத்தில் ஸ்வாமியின் பாதத்திற்கு நேரே அவரை வணங்கிய கோலத்தில் தனிச் சன்னதியில் இருக்கிறார். இவரிடம் வேண்டிக் கொண்டால் சிவன், விஷ்ணு இருவரது அருள் கிடைக்கவும் உதவி செய்வார் என்பது நம்பிக்கை.
அசுர குலத்தைச் சேர்ந்த தில்லி என்பவள் பெருமாளிடம், "தான் மரங்கள் நிறைந்த வனமாக இருக்க விரும்புவதாகவும், அவ்விடத்தில் ஸ்வாமி எழுந்தருள வேண்டும்' என்றும் வேண்டினாள். விஷ்ணுவும் அருள் புரிய அவளே சிதம்பரத்தில் தில்லை மரங்களாக வளர்ந்து நிற்க விஷ்ணு இத்தலத்தில் பள்ளி கொண்டார். தலமும் "தில்லை நகர்' எனப்பட்டது. தாயார் புண்டரீகவல்லி தனிச்சன்னதியில் இருக்கிறாள். பிரகாரத்தில் ஸ்வாமியின் பாதத்திற்கு நேரே அவரது திருவடிகள் இருக்கிறது. இதனை வணங்குபவர்களுக்கு மோக்ஷம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கஜேந்திர வரதரை தூக்கிய கோலத்தில் கருடாழ்வார், நரசிம்மர், வேணு கோபாலர், பதஞ்சலி மகரிஷி, ஆண்டாள், ஆஞ்சநேயர் ஆகியோரும் இருக்கின்றனர்.
கைலாயத்தில் ஒரு சமயம் சிவனும், பார்வதியும் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் ஆனந்தமாக நடனமாடினர். நடனம் முடிந்த போது தங்களில் யார் நன்றாக ஆடியது என அவர்களுக்குள் சந்தேகம் எழுந்தது. பிரம்மாவிடம் தங்களின் சந்தேகத்தைக் கேட்டனர். அவரால் சரியாக தீர்ப்பு சொல்ல முடியவில்லை. எனவே இருவரும் தங்களுக்கு தீர்ப்பு சொல்லும்படி மகாவிஷ்ணுவிடம் கேட்டுக் கொண்டனர். அவர் தேவ சிற்பியான விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு ஒரு சித்திரை சபையை அமைத்து, அதில் நடன போட்டியை வைத்துக் கொள்ளும்படி கூறினார். சிவனுக்கும், பார்வதிக்கும் நடனப் போட்டி ஆரம்பமானது. சிவன் தன் தாண்டவங்கள் அனைத்தையும் ஆடிக் காட்டினார். பார்வதி தேவியும் சலிக்காமல் அவருக்கு ஈடு கொடுத்து ஆடினார். ஒருவரை ஒருவர் மிஞ்சும் படி இருவரும் ஆடிக் கொண்டிருக்க இறுதியில் தன் வலக் காலைத் தூக்கி தலைக்கு மேலே நிறுத்தினார் சிவன். பார்வதியால் காலைத் தூக்கி ஆட முடியவில்லை. எனவே, சிவனே வெற்றி பெற்றதாக அறிவித்தார் மகாவிஷ்ணு. பின் சிவன் இங்கு நடராஜராகவே எழுந்தருளி, மகாவிஷ்ணுவையும் இங்கேயே தங்கும்படி கூறினார். விஷ்ணுவும் பள்ளி கொண்ட கோலத்தில் தங்கினார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்


No comments:
Post a Comment