About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 8 December 2025

சித்திரை - க்ருத்திகை - ஸ்ரீ உய்யக் கொண்டார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

க்ருத்திகை நக்ஷத்திரம் 

1. ஸ்ரீ உய்யக் கொண்டார்
(ஸ்ரீ புண்டரீகாக்ஷர்)

  • மாதம் - சித்திரை 
  • நக்ஷத்திரம் -  க்ருத்திகை
  • அவதார ஸ்தலம் -  திருவெள்ளறை
  • ஆசார்யன் –  நாதமுனிகள்
  • ஸிஷ்யர்கள் - மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணி பாண் பெருமாள் அரையர், சேட்டலூர் செண்டலங்கார தாஸர், ஸ்ரீ புண்டரீக தாஸர், கோமடம் திருவிண்ணகரப்பன், உலகபெருமாள் நங்கை
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருக்குருகூர்
  • அருளிச் செய்தவை -  திருப்பாவை தனியன்கள்

தனியன்
1. நம: பங்கஜ நேத்ராய நாத: 
ஸ்ரீ பாத பங்கஜே|
ந்யஸ்த ஸர்வ பராய 
அஸ்மத் குல நாதாய தீமதே||

2. மேஷ மாஸே சரோஜாஷம் 
கிருத்திகா ஜாதம் ஆஸ்ரயே|
நாதயோகி பதாம் போஜ 
த்வந்த ப்ரவண மாநசம்||

3. நமஸ்யாம் அரவிந்தாக்ஷம் 
நாத பாவே வ்யவஸ்திதம்|
ஸூத்த சத்வ மயம் 
சவ்ரேர் அவதாரம் இவா பரம்||

வாழி திருநாமம்
1. வால வெய்யோன் தனை வென்ற வடிவழகன் வாழியே|
மால் மணக்கால் நம்பி தொழும் மலர்ப் பதத்தோன் வாழியே|
சீல மிகு நாதமுனி சீர் உரைப்போன் வாழியே|
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியே|
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே|
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே|
மால் அரங்க மணவாளர் வளம் உரைப்போன் வாழியே|
வையம் உய்யக் கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே||

2. எந்தாதை நாதமுனி இணை அடியோன் வாழியே| 
ஏராரும் சித்திரையில் கார்த்திகையான் வாழியே| 
நந்தாமல் நாதமுனி நலம் புகழ்வோன் வாழியே|
நாலிரண்டும் ஐயைந்து நன்று அளித்தான் வாழியே|
செந்தாதார் வெள்ளறையில் சிறக்க வந்தோன் வாழியே|
சேம மணக்கால் நம்பிக்கு அருள் புரிந்தோன் வாழியே|
சிந்தாமல் தரிசனத்தை விளங்குவித்தான் வாழியே|
தேசுறும் உய்யக் கொண்டார் சேவடிகள் வாழியே||

நாதமுனிகளின் முக்கியமான சிஷ்யர்கள் உய்யக்கொண்டார், குருகைக் காவலப்பன் ஆகியோர்.   நாதமுனிகள் யோக சாஸ்திரத்தை மேற்கூறிய சிஷ்யர்களுக்கு பயிற்றுவிக்க விரும்பியபோது, உய்யக்கொண்டார் “பிணம் கிடக்க மணம் புணர்வார் உண்டோ?” என்று கூறினார்.    இறந்து போனவர்கள் வீட்டில் திருமணம் போன்ற மங்களகரமான செயல்களைப் பற்றிப் பேசுவார்களா என்பது இவ்வாக்கியத்தின் பொருள்.  இந்த சம்சாரத்தில் இருப்பவர்கள் அல்லலுறும்போது நான் மட்டும் யோக சாஸ்திரத்தைக் கற்று எம்பெருமானை அனுபவிக்கலாகுமா? என்று உய்யக்கொண்டார் வினவினார்.  நான் நாலாயிர பாசுரங்களைக் கற்றுத் தேர்ந்து அவற்றை இவ்வுலகத்தவர்க்கு அறிவித்து அவர்கள் உய்யும் வழி செய்வேன் என்று சூளுரைத்தார். மற்றவர்கள் உஜ்ஜீவனத்திற்காகத் தன்னை அர்ப்பணித்தவர் என்ற பொருள்படும்படி உய்யக் கொண்டார் என்ற திருநாமம் ஏற்பட்டது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

சித்திரை - அஸ்விநி - ஸ்ரீ வடுக நம்பி

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அஸ்விநி நக்ஷத்திரம்

1. பண்டிகை
சித்திரை முதல் நாள் தமிழ் வருஷப் பிறப்பு

2. ஸ்ரீ வடுக நம்பி
(ஆந்திர பூர்ணர்)

  • மாதம் - சித்திரை 
  • நக்ஷத்திரம் - அஸ்விநி
  • அவதார ஸ்தலம் - சாளக்ராமம் (கர்நாடகம்)
  • ஆசார்யன் – எம்பெருமானார்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - சாளக்ராமம்
  • அருளிச் செய்தவை - யதிராஜ வைபவம், ராமானுஜ அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம், ராமானுஜ அஷ்டோத்தர சத நாமாவளி   

தனியன்
1. சைத்ரே த்வஸ்²விநி ஸஞ்ஜாதம் 
ஸம்ஸார் ஆர்ண வதாரகம்|
ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் 
ஆந்த்ர பூர்ணம் அஹம் பஜே||
 
2. ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் 
ஸாலக்ராம நிவாஸிநம்|
பஞ்சம உபாய ஸம்பந்நம் 
ஸால க்ராமார்யம் ஆச்ரயே||

3. ராமாநுஜார்ய சரண 
ப்ரவணம் பரதேவவத்| 
வடு பூர்ண மஹம் வந்தே 
பரஜ்ஞாந பயோ நிதம்||

வாழித் திருநாமம்
1. சித்திரையில் அஸ்விநியில் சிறப்புடன் பிறந்தான் வாழியே| 
மிதுன ஸாலக்கிராம நகரத்தை வாழ்வித்தான் வாழியே| 
அத்திகிரி அடி பணிந்தவனிடம் காதல் உற்றான் வாழியே| 
ஆசார்யன் அன்றி வேறு தெய்வம் அறியாதவன் வாழியே| 
முக்தி அடைய ஆசார்யன் பாதமே கதி என்றான் வாழியே| 
பால் பொங்கிடும் என்று அரங்கனையே வெறுத்தான் வாழியே| 
எதிராசர் மிகு அருள் பெற்று உணர்ந்தோன் வாழியே| 
வடுக நம்பி திருவடிகள் ஊழிதோர் ஊழி வாழியே|| 

2. ஏராரும் சித்திரையில் அசுவதி வந்தான் வாழியே| 
எழில் ஸாலக்கிராம நகரத்தில் அவதரித்தான் வாழியே| 
சரம பர்வ நிஷ்டையில் ஊன்றினான் வாழியே| 
எம்பெருமானாரே தெய்வம் என்று அநுஷ்டித்தான் வாழியே| 
அந வரதம் ஆசார்ய கைங்கர்யமே பொழுது போக்கும் என்றான் வாழியே| 
ஆசார்யனை அல்லாது வேறு தெய்வம் அறியான் வாழியே| 
ஸ்வாச்சார்யர் அஷ்டோத்ர சத நாமங்களை அருளினான் வாழியே| 
ஸ்ரீ ராமாநுஜர் வைபவமே நிரந்தரம் அநுசந்தித்தான் வாழியே| 
ஆசார்ய பாத தீர்த்தமே பரம போக்யம் என்று எண்ணினான் வாழியே| 
ஸ்ரீ வடுக நம்பி திருவடிகள் வாழி வாழி வாழியே||

வைணவ ஆச்சாரியனான இராமாநுசரின் முதன்மை மாணாக்கரில் ஒருவர். தன் குருவாகிய இராமானுசர் மீது கொண்ட அளவில்லா குருபக்திக்காக இவர் பெரிதும் புகழப்பெறுகிறார். 

வடுக நம்பி ஆசார்ய நிஷ்டையில் ஊறியிருந்தார். தினமும் இவர் எம்பெருமானார் திருவடி நிலைகளுக்கே திருவாராதனம் செய்வர். ஒரு நாள் ஸ்வாமி யாத்திரை கிளம்புகையில் அவரது திருவாராதன எம்பெருமான்களோடு, தாம் பூசித்து வந்த ஆசார்யன் திருவடி நிலைகளையும் மூட்டை கட்ட, அது கண்டு துணுக்குற்ற எம்பெருமானார், “நம்பீ! என் செய்தீர்!” என்று கடிந்தபோது, இவர், “ஸ்வாமி! உம் திருவாராதனப் பெருமாளை விட நம் திருவாராதனப் பெருமாள் குறைவிலரே” என்றாராம்.

எம்பெருமானார் பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்யப் போகும்போதெல்லாம் நம்பியும் உடன் எழுந்தருளி, அவர் பெருமாளின் அழகை அனுபவிக்கும்போது இவர் ஸ்வாமியையே நோக்கியிருக்க, அவர் இவரைப் பெருமாளின் திருக்கண் அழகைப் பாரீர் என்ன, நம்பி, ஆசார்யன் திருவுள்ளம் குளிர, “என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!” (அதாவது, என்னுடைய ஸ்வாமியான தேவரீரைக் (எம்பெருமானாரை) கண்ட கண்கள் எம்பெருமானையே கூட காணாது) என்று திருப்பாணாழ்வார் திருவாக்கைக் கூறினாராம்.

வடுக நம்பி எப்போதும் எம்பெருமானார் அமுது செய்த மிச்சில் ப்ரஸாதத்தையே ஸ்வீகரித்து அமுது செய்தபின், கைகளை அலம்பாமல் தம் தலையில் துடைத்துக் கொள்வார், பிரசாதம் உட்கொண்டபின் கையை அலம்பிச் சுத்தம் செய்யக் கூடாதென்பதால். ஒரு நாள், இது கண்டு துணுக்குற்ற எம்பெருமானார் கேள்வி எழுப்பவே, நம்பி தம் கைகளை அலம்பினார். பிற்றைநாள் பெருமாள் பிரசாதம் தாம் உட்கொண்ட மிகுதியை ஸ்வாமி தர வாங்கி உண்ட நம்பி கைகளை அலம்ப எம்பெருமானார் வியப்புற்று வினவ, “தேவரீர் நேற்று உபதேசித்த படியே அடியேன் செய்தேன்” என்றாராம். அதைக் கேட்ட எம்பெருமானார், ”உம்மிடம் நாம் தோற்றோம்!” என்றார்.

ஒரு முறை வடுக நம்பி எம்பெருமானாருக்கு, திருமடைப் பள்ளியில் பால் அமுது காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்பொழுது நம்பெருமாள் திருவீதியில் புறப்பாடாக  மடத்து வாசலில் எழுந்தருள, எம்பெருமானார் வெளியே சென்று சேவித்து, வடுக நம்பியை வெளியே வருமாறு கூப்பிட்டார். அப்பொழுது, நம்பியோ, வெளியே வராமல், உள்ளிருந்தபடியே “அடியேன் உம் பெருமாளைக் காண வெளியே வந்தேன் என்றால், என் பெருமாளின் பால் பொங்கிவிடும், ஆதலால் அடியேன் வெளியே வர முடியாது” என்று கூறும்படியான ஆசார்ய நிஷ்டையுடன் திகழ்ந்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

சித்திரை மாதம் - Apr Mid - May Mid

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சித்திரை மாதத்தில் அவதரித்த 
பெருமாள், தாயார், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் 
திருநட்சத்திரம் மற்றும் பண்டிகைகள்

  • 1. சித்திரை முதல் நாள் தமிழ் வருஷப் பிறப்பு - பண்டிகை

அஸ்விநி 

  • 2. ஸ்ரீ வடுக நம்பி (ஆந்திர பூர்ணர்)

க்ருத்திகை

  • 3. ஸ்ரீ உய்யக் கொண்டார் (ஸ்ரீ புண்டரீகாக்ஷர்)
  • 4. ஸ்ரீ ஜீயர் நாயனார் (மணவாள மாமுனிகளின் பூர்வாஸ்ரம பௌத்ரன்)

ரோஹிணி

  • 5. ஸ்ரீ எங்கள் ஆழ்வான் (விஷ்ணுசித்தர்)
  • 6. ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி பாலதந்வி வரதாச்சார்யார்

திருவாதிரை

  • 7. ஸ்ரீ ராமாநுஜர் (எம்பெருமானார்)
  • 8. ஸ்ரீ ஆட்கொண்டவில்லி ஜீயர்
  • 9. ஸ்ரீ சோமாசியாண்டான் (ஸ்ரீ ராம க்ரது நாதார்யர்)

புனர்பூசம்

  • 10. ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் - ஸ்ரீராம நவமி - பண்டிகை 
  • 11. ஸ்ரீ முதலியாண்டான் (தாசரதி)

ஆயில்யம்

  • 12. ஸ்ரீ கோயில் கந்தாடை கொமாண்டூர் இளைய வல்லி ஆச்சான் (பாலதந்வி, 74 ஸிம்ஹாஸநாதி பதிகளுள் ஒருவர்)

ஹஸ்தம்

  • 13. ஸ்ரீ தேவப் பெருமாள்
  • 14. ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் (ப்ரணதார்த்தி ஹரர்)

சித்திரை

  • 15. ஸ்ரீ மதுரகவி ஆழ்வார்
  • 16. ஸ்ரீ அநந்தாழ்வான் (அநந்தார்யர்)
  • 17. ஸ்ரீ நடாதூர் அம்மாள் (வாத்ஸ்ய வரதாசார்யர்)
  • 18. ஸ்ரீ பெரியாண்டான் (சுந்தர சிங்கப் பிரான்)
  • 19. ஸ்ரீ திருத்தாழ்வரை தாசர்

அனுஷம்

  • 20. ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி தொட்டையாசார்யர்

திருவோணம்

  • 21. ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் (லோகார்ய முநி)
  • 22. ஸ்ரீ ஞான தீருஷ்டீ அழகப்பைய்யங்கார் (ஆத்தான் ஸ்வாமியின் திருக்குமாரர்)
  • 23. ஸ்ரீ விஞ்சிமூர் தாதாச்சாரியார்
  • 24. ஸ்ரீ ஒன்றான திருக்குறுங்குடி ராமாநுஜ ஜீயர்

ரேவதி

  • 25. ஸ்ரீ நம்பெருமாள்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||