||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 124 - கோபால கோளரி
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
தத்துக் கொண்டாள் கொலோ?*
தானே பெற்றாள் கொலோ?*
சித்தம் அனையாள்* அசோதை இளஞ்சிங்கம்*
கொத்து ஆர் கருங்குழல்* கோபால கோளரி*
அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்! (2)
- தத்து கொண்டாள் கொல் ஓ - இந்தப் பிள்ளையை யசோதை புத்ரனாக வளர்த்துக் கொண்டாளோ! அல்லது
- தானே பெற்றாள் கொலோ - ஸ்வயமாகவே மெய் நொந்து பெற்றெடுத்தாளோ!
- சித்தம் அனையாள் - கண்ணனுடைய மனக் கருத்தை ஒத்து நடப்பவளாகிய
- அசோதை - யசோதையினுடைய
- இளஞ்சிங்கம் - சிங்கக்குட்டி போன்றவனும்
- நந்தகோபன் குமாரன் யசோதை இளம் சிங்கம் -திருப்பாவை
- கொத்து ஆர் கருங்குழல் - பூங்கொத்துக்களை யணிந்த கரிய கூந்தலை யுடையவனும்
- கோபாலர் கோன் அரி - இடையர்கட்கு (அடங்காத) மிடுக்கைக் கொண்ட சிங்கம் போன்றவனுமாகிய
- மீண்டும் சிங்கம் இங்கு
- அத்தன் - ஸ்வாமியான இவன்
- வந்து அப் பூச்சி காட்டுகின்றான் - அப்படிப் பட்ட மிகவும் பயங்கரமான பூச்சி காட்டுகின்றான்
- அம்மனே - அம்மா!
- அப் பூச்சி காட்டுகின்றான் - தலை கேசம் வைத்து மறைத்து, கண்ணை புரட்டி, சங்கு சக்கரம் காட்டி அப்பூச்சி காட்டுதல்
தத்து புத்திரனாக கண்ணனை எடுத்து வளர்த்தாளோ? அல்லது, தானே தன் வயிற்றில் பெற்றெடுத்தாளோ? என்று பலரும் வியக்கும் படியாகவும், தன் திருவுள்ளத்தை அநுசரித்தே நடந்த யசோதையின் சிங்கக்குட்டி போன்றவனும், பூக்கொத்துக்களை சூடிய கரிய கூந்தலை உடையவனும், இடையர்களை அடக்கி ஆளும் சிங்கம் போன்றவனும், ஸ்வாமியுமான கண்ணன் ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகின்றான்!
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment