||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||041. திருவஹீந்திரபுரம்||
||திரு அயிந்தை - திருவந்திபுரம் - கடலூர்||
||நாற்பத்தி ஒன்றாவது திவ்ய க்ஷேத்ரம்||
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10
திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1148 - பெரிய திருமொழி - 3.1.1
இருந் தண் மா நிலம் ஏனம் அது ஆய்* வளை மருப்பினில் அகத்து ஒடுக்கி*
கருந் தண் மா கடல் கண் துயின்றவன் இடம்* கமல நல் மலர்த் தேறல் அருந்தி*
இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி* அம் பொழிலூடே*
செருந்தி நாள் மலர் சென்று அணைந்து உழிதரு* திருவயிந்திரபுரமே|
002. திவ்ய ப்ரபந்தம் - 1149 - பெரிய திருமொழி - 3.1.2
மின்னும் ஆழி அங்கையவன்* செய்யவள் உறை தரு திரு மார்பன்*
பன்னு நான்மறைப் பல் பொருள் ஆகிய* பரன் இடம் வரைச் சாரல்*
பின்னும் மாதவிப் பந்தலில் பெடை வரப்* பிணி அவிழ் கமலத்து*
தென்ன என்று வண்டு இன் இசை முரல் தரு* திருவயிந்திரபுரமே|
003. திவ்ய ப்ரபந்தம் - 1150 - பெரிய திருமொழி - 3.1.3
வையம் ஏழும் உண்டு ஆல் இலை வைகிய மாயவன்*
அடியவர்க்கு மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம்* மெய்தகு வரைச் சாரல்*
மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய* முல்லை அம் கொடி ஆட*
செய்ய தாமரைச் செழும் பணை திகழ் தரு* திருவயிந்திரபுரமே|
004. திவ்ய ப்ரபந்தம் - 1151 - பெரிய திருமொழி - 3.1.4
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன் தன்* மார்பு அகம் இரு பிளவா*
கூறு கொண்டு அவன் குலமகற்கு* இன் அருள் கொடுத்தவன் இடம்*
மிடைந்து சாறு கொண்ட மென் கரும்பு இளங் கழை தகை*
விசும்பு உற மணி நீழல்*
சேறு கொண்ட தண் பழனம் அது எழில் திகழ்* திருவயிந்திரபுரமே|
005. திவ்ய ப்ரபந்தம் - 1152 - பெரிய திருமொழி - 3.1.5
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று* அகல் இடம் அளந்து*
ஆயர் பூங் கொடிக்கு இன விடை பொருதவன் இடம்* பொன் மலர் திகழ்*
வேங்கை கோங்கு செண்பகக் கொம்பினில்*
குதிகொடு குரக்கினம் இரைத்து ஓடி*
தேன் கலந்த தண் பலங்கனி நுகர்தரு* திருவயிந்திரபுரமே|
006. திவ்ய ப்ரபந்தம் - 1153 - பெரிய திருமொழி - 3.1.6
கூன் உலாவிய மடந்தை தன்* கொடுஞ் சொலின் திறத்து இளங் கொடியோடும்*
கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன் இடம்* கவின் ஆரும்*
வான் உலாவிய மதி தவழ் மால் வரை* மா மதிள் புடை சூழ*
தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய* திருவயிந்திரபுரமே|
007. திவ்ய ப்ரபந்தம் - 1154 - பெரிய திருமொழி - 3.1.7
மின்னின் நுண் இடை மடக் கொடி காரணம்* விலங்கலின் மிசை இலங்கை
மன்னன்* நீள் முடி பொடி செய்த மைந்தனது இடம்* மணி வரை நீழல்*
அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில்* பெடையொடும் இனிது அமர*
செந்நெல் ஆர் கவரிக் குலை வீசு* தண் திருவயிந்திரபுரமே|
008. திவ்ய ப்ரபந்தம் - 1155 - பெரிய திருமொழி - 3.1.8
விரை கமழ்ந்த மென் கருங் குழல் காரணம்* வில் இறுத்து*
அடல் மழைக்கு நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன்*
நிலவிய இடம் தடம் ஆர்*
வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு* மலை வளர் அகில் உந்தி*
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு* திருவயிந்திரபுரமே|
009. திவ்ய ப்ரபந்தம் - 1156 - பெரிய திருமொழி - 3.1.9
வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில்*
விசயனுக்கு ஆய்* மணித் தேர் கோல் கொள்*
கைத் தலத்து எந்தை பெம்மான் இடம்* குலவு தண் வரைச் சாரல்*
கால் கொள் கண் கொடிக் கைஎழக்* கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல்*
சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு* திருவயிந்திரபுரமே|
010. திவ்ய ப்ரபந்தம் - 1157 - பெரிய திருமொழி - 3.1.10
மூவர் ஆகிய ஒருவனை* மூவுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை*
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்சத்* தண் திருவயிந்திரபுரத்து*
மேவு சோதியை வேல் வலவன்* கலி கன்றி விரித்து உரைத்த*
பாவு தண் தமிழ்ப் பத்து இவை பாடிடப்* பாவங்கள் பயிலாவே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment