About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 29 November 2025

திவ்ய ப்ரபந்தம் - 135 - பெரியாழ்வார் திருமொழி - 2.2.8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||திவ்ய ப்ரபந்தம் - 135 - மல்லர் இருவரை அழித்தவன்||
||பெரியாழ்வார் திருமொழி||
||இரண்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்||

இரு மலை போல் எதிர்ந்த மல்லர்* 
இருவர் அங்கம் எரி செய்தாய்!* 
உன் திரு மலிந்து திகழு மார்வு* 
தேக்க வந்து என் அல்குல் ஏறி* 
ஒரு முலையை வாய் மடுத்து* 
ஒரு முலையை நெருடிக் கொண்டு* 
இரு முலையும் முறை முறையாய்* 
ஏங்கி ஏங்கி இருந்து உணாயே| 

  • இரு மலை போல் - இரண்டு மலை போலே வந்து
  • எதிர்ந்த - எதிர்த்து நின்ற
  • மல்லர் இருவர் - சாணூர முஷ்டிகர் என்னும் இரண்டு மல்லர்களுடைய
  • அங்கம் - உடல்களை
  • எரி செய்தாய் - பயத்தாலே எரியும் படி அழிந்து போகச் செய்தவனே!
  • உன் - உன்னுடைய
  • திரு மலிந்து - அழகு நிரம்பி
  • திகழும் மார்வு - விளங்குகின்ற மார்பானது
  • தேக்க - பாலாலே நிறையும்படி
  • வந்து - நீ வந்து
  • என் அல்குல் ஏறி - என் மடி மீது ஏறிக் கொண்டு
  • ஒரு முலையை - ஒரு மார்பகத்தில்
  • வாய் மடுத்து - வாயை வைத்துக் கொண்டு
  • ஒரு முலையை - மற்றொரு முலையை
  • நெருடிக் கொண்டு - கையினாலே நெருடிக் கொண்டிருந்து
  • இரு முலையும் - இரண்டு மார்பிலும்
  • முறை முறை ஆய் - மாறி மாறி
  • ஏங்கி ஏங்கி - இளைத்திளைத்து இப்படி
  • இருந்து - ஆர்வத்துடன்
  • உணாய் - உண்பாயாக

சாணூர முஷ்டிகரென்னும் மலைகளைப்போன்ற இரண்டு மல் யுத்த வீரர்களை அஞ்சி நடுங்கி எரிந்துபோகும்படி செய்தவனே! நீ வந்து என் மடியிலமர்ந்து, உன் திருமார்பு நிரம்பும் படியாக என் ஒரு முலையை வாயில் வைத்தும், மற்றொரு முலையை கையினால் நெருடிக்கொண்டும், இப்படியாக மாறி மாறி மூச்சுத் திணற என் இரண்டு முலைகளிருந்தும் பாலை உண்பாயாக என்கிறாள் யசோதை! 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment