About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 23 November 2025

திவ்ய ப்ரபந்தம் - 130 - பெரியாழ்வார் திருமொழி - 2.2.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||திவ்ய ப்ரபந்தம் - 130 - வாழ வைக்கும் வாசுதேவன்||
||பெரியாழ்வார் திருமொழி||
||இரண்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்||

தம் தம் மக்கள் அழுது சென்றால்* 
தாய்மார் ஆவார் தரிக்ககில்லார்* 
வந்து நின் மேல் பூசல் செய்ய* 
வாழ வல்ல வாசுதேவா!*
உந்தையார் உன் திறத்தர் அல்லர்* 
உன்னை நான் ஒன்று உரப்ப மாட்டேன்* 
நந்தகோபன் அணி சிறுவா!* 
நான் சுரந்த முலை உணாயே|

  • தம் தம் மக்கள் - தங்கள் தங்கள் பிள்ளைகள்
  • அழுது - அழுது கொண்டு
  • சென்றால் - தம் தம் வீட்டுக்குப் போனால்
  • தாய்மார் ஆவார் - அக்குழந்தைகளின் தாய்மார்கள்
  • தரிக்க கில்லார் - மனம் பொறுக்க மாட்டார்கள்
  • வந்து - தம் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து
  • நின் மேல் - உன் மேல் 
  • பூசல் செய்ய - வாக்குவாதம் செய்வார்கள்
  • வாழ வல்ல - அதை கண்டு சந்தோஷப்படும்
  • வாசுதேவா! - கண்ண பிரானே!
  • உந்தையார் - உன் தகப்பனார்
  • உன் திறத்தர் - உன் நடவடிக்கைகளை
  • அல்லர் - கவனிப்பவர் அல்லர்
  • நான் - அபலையான நானும்
  • உன்னை - உன்னை
  • ஒன்று உரப்ப மாட்டேன் - ஒன்றும் அதட்ட மாட்டேன்
  • நந்தகோபன் - நந்தகோபருடைய
  • அணி சிறுவா! - அழகிய சிறு பிள்ளையே
  • நான் சுரந்த முலை - என்னிடம் சுரக்கும் பாலை
  • உணாயே - பாலை உண்பாயாக

கண்ணன் தன்னுடன் விளையாடும் பிள்ளைகளை அடித்து அழ விட்டு அதைக் கண்டு மகிழ்ந்திருக்கையில், அப்பிள்ளைகளின் தாய்மார்கள் அழுகின்ற தங்கள் பிள்ளைகளோடு வந்து யசோதையிடம் கண்ணனைப் பற்றி புகார் செய்ய, யசோதை கண்ணனின் குரும்பை கண்டிக்க இயலாதவளாய் கண்ணனைப் பார்த்து, கண்ணா! உன் தகப்பனாரும் உன்னை கவனிப்பார் இல்லை! நானும் உன்னை கோபிப்பதில்லை! இதெல்லாம் ஒருபுறமிருக்க, நந்தகோபரின் அழகிய சிறு பிள்ளையான நீ, என் பால் சுரக்கும் முலையை உண்பாயாக!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment