About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 23 November 2025

ஸ்ரீமத் பாகவத புராணம் - 97

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||விதுர மைத்ரேய ஸம்வாதம் - 42||

||ஸ்கந்தம் 03||

ஜீவனின் உபாதி சரீரம் முக்தியடையும் வரை ஜீவனுடன் தொடர்ந்திருக்கும்.

முக்தி பெற விரும்புபவன் பிறப்பு இறப்பு கண்டு வருந்தலாகாது.

ஆன்மாவின் உண்மையைப் பற்றிய அறிவு, பகவானைத் தவிர மற்ற உலகியல் விஷயங்களில் பற்றின்மை, சாஸ்திரங்களை உணர்ந்த கலக்கமற்ற புத்தி ஆகியவற்றினால், மாயையால் தோன்றிய இவ்வுலகில் ஓடித்திரிய வேண்டும். வாழவும் வேண்டும்.

அறிவுள்ள மனிதன் தன் கடைமைகளைச் செய்கையில்‌ பலனை எதிர்பார்த்துச் செய்வதில்லை. உரிய முறையில் பகவத் அர்ப்பணமாகவே செய்கிறான்.


உடல்‌ இன்பத்திற்காகவும் செய்வதில்லை. இம்மாதிரி மனிதர்கள் சாந்தமான தூய்மையான மனத்துடன் துறவு மனமுடையவராக தன் கடைமையைச் செய்து சத்வகுணம் மேலோங்கி இருக்கிறான்.

அவன் முடிவில் அர்ச்சிஸ் அல்லது தேவயானம் என்ற சூரியன் வழியில், நீக்கமற நிறையும் பகவானையே அடைகிறான். அர்ச்சிராதி மார்கம் என்பது ஒளி, அஹஸ் (பகல்), வளர்பிறை, உத்தராயணம், ஸம்வத்ஸரம்,(வருடம்), வாயு, சூரியன், சந்திரன், வித்யுத் (மின்னல்), வருணன், இந்திரன், ப்ரும்மதேவர் என்ற வரிசைக் கிரமம் ஆகும்.

ப்ரும்மதேவர் தன் ஆயுள்காலமான இரண்டு பரார்தங்கள் முடிந்ததும், பூமி, ஜலம், காற்று, தீ, ஆகாயம், மனம்,‌இந்திரியங்கள், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற விஷயங்கள், அஹங்காரத்தால்‌ சூழப்பட்ட ப்ரபஞ்சத்தை அழிக்க எண்ணி சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குண வடிவோடு கலந்து பரப்ரும்மத்தில் ஐக்கியமாகிறார்.

அப்போது ப்ராணனையும்‌ மனத்தையும் வசப்படுத்திய யோகிகள் இவ்வுடலை விடுத்து ப்ரும்மதேவருடன் ஐக்கியமாகிறார்கள்.

பகவத் குண ச்ரவணம், பக்தி, முக்தியை அளிப்பது. பிறவிச் சுழலிலிருந்து விடுவிப்பது. இறைவனைப் பற்றிய கதைகளைச் செவியாறப் பருகாமல், வீணான உலகின்‌ கவர்ச்சியான செய்திகளைப் படிப்பது, கேட்பது போன்ற‌செயல்களைச் செய்பவர்கள், நல்ல உணவை விடுத்து மலத்தைத் தேடியலையும் பன்றி போல் ஆவார். அவர்களை விடப்‌பேறு கெட்டவர் எவருளர்? அவர்கள் விதியின் கொடுமைக்கு‌ ஆளாவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment