About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 28 November 2025

ஸ்ரீமத் பாகவத புராணம் - 101

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||விதுர மைத்ரேய ஸம்வாதம் - 46||

||ஸ்கந்தம் 04||

மனுவின் வம்சத்தைத் தொடர்ந்து கூறினார் மைத்ரேயர்.

ப்ரும்ம தேவரின் மகன் தக்ஷன் ஸ்வாயம்புவ மனுவின் மகள் ப்ரஸூதியை மணந்தான் என்று பார்த்தோம்.

அவர்களுக்கு கண்ணழகிகளாக பதினாறு மகள்கள் பிறந்தனர்.

தக்ஷன் தன் பதிமூன்று பெண்களை தர்ம தேவதைக்கும், அக்னிக்கு ஒரு பெண்ணையும், பித்ரு கணங்களுக்கு ஒரு பெண்ணையும், ஸம்சார பந்தத்தைப் போக்கும் சிவனுக்கு ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொடுத்தான்.

ச்ரத்தை, மைத்ரி, தயை, சாந்தி, துஷ்டி, புஷ்டி, கிரியை, உன்னதி, புத்தி, மேதை, திதிக்ஷை, ஹ்ரீ, மூர்த்தி ஆகிய பதிமூன்று பேரும் தர்மதேவனின்‌ மனைவிகள்.

ச்ரத்தை சுபனையும், மைத்ரீ ப்ரஸாதனையும், தயை அபயனையும், சாந்தி சுகனையும், துஷ்டி முதனையும், புஷ்டி செருக்கையும் (அஸூய:) பெற்றார்கள்.

எல்லா நற்குணங்களையும் கொண்ட மூர்த்தி என்பவள் நர, நாராயணன் என்னும் ரிஷிகளைப் பெற்றாள்.

இவ்விருவரும்‌ பிறந்த போது, உலகெங்கும்‌ செழித்து மகிழ்ந்தது. தேவர்கள் பூமாரி பொழிந்து துதி செய்தனர். அவர்களது துதியைக்‌ கேட்டு மகிழ்ந்த நர நாராயணர்கள் கந்தமாதன மலை நோக்கிச் சென்றனர்.


விதுரா! பகவானின் அம்சமான அவர்களே பூபாரம் தீர்க்கவேண்டி இப்போது யது வம்சம், குரு வம்சம் இரண்டிலுமாக ஸ்ரீ க்ருஷ்ணனாகவும், அர்ஜுனனாகவும் அவதாரம்‌ செய்துள்ளார்கள்.

அக்னி தேவனின் மனைவியான ஸ்வாஹா என்பவள் பாவகன், பவமானன், சுசி என்ற மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். அவர்கள் வேள்விகளில் ஹோமம் செய்யப்படும் பொருள்களை மட்டுமே புசிப்பார்கள். இந்த மூவரிடமிருந்து 45 விதமான அக்னிகள்‌ தோன்றின.

தாத்தாவான அக்னி தேவன், மகன்களான மூன்று பேர், அவர்களின் மகன்களான 45 பேர், ஆகிய நாற்பத்தொன்பது பேரும் அக்னிகளே. வே‌தம் ஓதும் அறிஞர்கள் இவர்களின் திருப்பெயர்களைச் சொல்லியே இஷ்டிகளைச் செய்கின்றனர்.

அக்னிஷ்வர்த்தாக்கள், பர்ஹிஷதர்கள், ஸோமபர்கள், ஆஜ்யபர்கள் என்று நால்வகை பித்ருதேவதைகள் உளர்.

அவியுணவை உண்பவர்கள் அக்னிகள் என்றும், அந்தணர்களின் திருக்கரங்களில் இடுபவற்றை உண்பவர் அனக்னிகள் என்றும் அறியப்படுவர்.

இந்த பித்ருதேவதைகளின் ஸ்வரூபத்தின் மனைவி ஸ்வதா என்பவள்.

இவர்களது குழந்தைகள் வயுனா, தாரினி என்ற இரு பெண்கள். இவர்கள் வேதம் ஓதியவர்கள். இவர்களுக்கு சந்ததி இல்லை.

பரமேஸ்வரனின் மனைவியான ஸதி பெரும் குணவதி. அவள் எப்போதும் அவருக்குத் தொண்டு செய்வதிலேயே அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்தாள். அவளுக்கும் புத்ரன் இல்லை.

குற்றத்தையும் கூட குணமாக ஏற்கும் பரமசிவனிடம் தன் தந்தை தக்ஷன் வீண் பகை பாராட்டியதால் அவள் தன் இளம் பருவத்திலேயே யோகத் தீயினால் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment