About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 28 November 2025

திவ்ய ப்ரபந்தம் - 133 - பெரியாழ்வார் திருமொழி - 2.2.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||திவ்ய ப்ரபந்தம் - 133 - யான்நோற்ற நோன்பின் பயன்||
||பெரியாழ்வார் திருமொழி||
||இரண்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்||

மின் அனைய நுண் இடையார்* 
விரி குழல் மேல் நுழைந்த வண்டு* 
இன் இசைக்கும் வில்லிபுத்தூர்* 
இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்*
என்ன நோன்பு நோற்றாள் கொலோ* 
இவனைப் பெற்ற வயிறு உடையாள்* 
என்னும் வார்த்தை எய்து வித்த* 
இருடிகேசா! முலை உணாயே|

  • மின் அனைய - மின்னலைப் போன்ற
  • நுண் - நுட்பமாக உள்ள
  • இடையார் - இடுப்பை உடைய பெண்களின்
  • விரி குழல் மேல் - விரிந்து பரந்த கூந்தலின் மேல்
  • நுழைந்த - தேனை உண்ணப் புகுந்த
  • வண்டு - வண்டுகள் தேனை உண்டு களித்து
  • இன் இசைக்கும் - இனிதாக ரீங்காரம் செய்யும்
  • வில்லிபுத்தூர் - ஸ்ரீவில்லிபுத்தூர் தலத்திலே
  • இனிது - மன நிறைவாய் 
  • அமர்ந்தாய் - எழுந்தருளி இருப்பவனே!
  • உன்னைக் கண்டார் - உன்னைப் பார்ப்பவர்
  • என்ன நோன்பு - என்ன தவம்
  • நோற்றாள் கொலோ - செய்தாளோ
  • இவனைப் பெற்ற - இவனை பிள்ளயாகப் பெற்ற
  • வயிறு உடையாள் - வயிற்றை யுடையவள்
  • என்னும் - என்று கொண்டாடிச் சொல்லுகிற
  • வார்த்தை - வார்த்தையை
  • எய்துவித்த - எனக்கு உண்டாகும் படி செய்த
  • இருடீகேசா! - ஹ்ருஷீகேசனே!
  • முலை உணாயே - தாய்ப் பாலை உண்ணாயோ!

மின்னல் கொடி போன்ற இடையையுடைய பெண்களின் விரிந்து பரந்த கூந்தலின் மேல் தேனை குடிக்க நுழைந்த வண்டுகள் இன்னிசை பாடி நிற்க, ஸ்ரீவில்லிபுத்தூரில் அழகாகத் தோன்றியவனே! உன்னைப் பார்த்தவர்கள் இவனைப் பெற்றெடுத்தவள் என்ன தவம் செய்தாளோ! என்று சொல்லும் புகழ்ச் சொல்லுக்கு உரியவளாக என்னை ஆக்கின ஹ்ருஷீகேசனே! என் முலையின் பாலை உண்பாயாக என்கிறாள் யசோதை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment