||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||001. திருவரங்கம்||
||ஸ்ரீரங்கம் - திருச்சி||
||முதலாவது திவ்ய க்ஷேத்ரம்||
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 247 - 2
பெரியாழ்வார்
015. திவ்ய ப்ரபந்தம் - 412 - பெரியாழ்வார் திருமொழி - 4.9.1
மரவடியைத் தம்பிக்கு* வான் பணையம் வைத்துப் போய்*
வானோர் வாழ* செருரு உடைய திசைக் கருமம்*
திருத்தி வந்து உலகாண்ட* திருமால் கோயில்*
திருவடி தன் திரு உருவும்* திருமங்கை மலர்க் கண்ணும் காட்டி நின்று*
உரு உடைய மலர் நீலம் காற்று ஆட்ட* ஒலி சலிக்கும் ஒளி அரங்கமே| (2)
016. திவ்ய ப்ரபந்தம் - 413 - பெரியாழ்வார் திருமொழி - 4.9.2
தன் அடியார் திறத்தகத்துத்* தாமரையாள் ஆகிலும் சிதகு உரைக்கு மேல்*
என் அடியார் அது செய்யார்* செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்*
மன் உடைய விபீடணற்கா*
மதிள் இலங்கைத் திசை நோக்கி மலர்க் கண் வைத்த*
என்னுடைய திருவரங்கற்கு அன்றியும்* மற்று ஒருவர்க்கு ஆள் ஆவரே? (2)
017. திவ்ய ப்ரபந்தம் - 414 - பெரியாழ்வார் திருமொழி - 4.9.3
கருள் உடைய பொழில் மருதும்* கதக் களிறும் பிலம்பனையும் கடிய மாவும்*
உருள் உடைய சகடரையும் மல்லரையும்* உடைய விட்டு ஓசை கேட்டான்*
இருள் அகற்றும் எறி கதிரோன்* மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி*
அருள் கொடுத்திட்டு அடியவரை*
ஆட்கொள்வான் அமரும் ஊர் அணி அரங்கமே|
018. திவ்ய ப்ரபந்தம் - 415 - பெரியாழ்வார் திருமொழி - 4.9.4
பதினாறாம் ஆயிரவர்* தேவிமார் பணி செய்யத்*
துவரை என்னும்* அதில் நாயகராகி வீற்றிருந்த*
மணவாளர் மன்னு கோயில்* புது நான் மலர்க் கமலம்*
எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்*
பொது நாயகம் பாவித்து* இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே|
019. திவ்ய ப்ரபந்தம் - 416 - பெரியாழ்வார் திருமொழி - 4.9.5
ஆமையாய்க் கங்கையாய்* ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய்*
நான்முகனாய் நான்மறையாய்*
வேள்வியாய்த் தக்கணையாய்த் தானும் ஆனான்* சேமம் உடை நாரதனார்*
சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில்*
பூ மருவிப் புள் இனங்கள்* புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே|
020. திவ்ய ப்ரபந்தம் - 417 - பெரியாழ்வார் திருமொழி - 4.9.6
மைத்துனன்மார் காதலியை* மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னர் ஆக்கி*
உத்தரைதன் சிறுவனையும் உய்யக் கொண்ட* உயிராளன் உறையும் கோயில்*
பத்தர்களும் பகவர்களும்* பழமொழிவாய் முனிவர்களும் பரந்த நாடும்*
சித்தர்களும் தொழுது இறைஞ்சத்* திசை விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே|
021. திவ்ய ப்ரபந்தம் - 418 - பெரியாழ்வார் திருமொழி - 4.9.7
குறள் பிரமசாரியாய்* மாவலியைக் குறும்பு அதக்கி அரசு வாங்கி*
இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை*
கொடுத்து உகந்த எம்மான் கோயில்*
எறிப்பு உடைய மணிவரை மேல்*
இளஞாயிறு எழுந்தாற் போல் அரவணையின் வாய்*
சிறப்பு உடைய பணங்கள் மிசைச்*
செழுமணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே|
022. திவ்ய ப்ரபந்தம் - 419 - பெரியாழ்வார் திருமொழி - 4.9.8
உரம் பற்றி இரணியனை* உகிர் நுதியால் ஒள்ளிய மார்வு உறைக்க ஊன்றி *
சிரம் பற்றி முடி இடியக் கண் பிதுங்க* வாய் அலறத் தெழித்தான் கோயில்*
உரம் பெற்ற மலர்க் கமலம்* உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட*
வரம்பு உற்ற கதிர்ச் செந்நெல்*
தாள் சாய்த்துத் தலை வணக்கும் தண் அரங்கமே|
023. திவ்ய ப்ரபந்தம் - 420 - பெரியாழ்வார் திருமொழி - 4.9.9
தேவு உடைய மீனமாய் ஆமையாய்* ஏனமாய் அரியாய்க் குறளாய்*
மூவுருவில் இராமனாய்க்* கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில்*
சேவலொடு பெடை அன்னம்* செங்கமல மலர் ஏறி ஊசல் ஆடிப்*
பூ அணை மேல் துதைந்து எழு*
செம்பொடி ஆடி விளையாடும் புனல் அரங்கமே|
024. திவ்ய ப்ரபந்தம் - 421 - பெரியாழ்வார் திருமொழி - 4.9.10
செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன்* செருச் செய்யும் நாந்தகம் என்னும்*
ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன்* விழுக்கை யாளன்*
இரவு ஆளன் பகலாளன் எனையாளன்* ஏழு உகப் பெரும் புரவாளன்*
திருவாளன் இனிதாகத்* திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே|
025. திவ்ய ப்ரபந்தம் - 422 - பெரியாழ்வார் திருமொழி - 4.9.11
கைந்நாகத்து இடர் கடிந்த* கனல் ஆழிப் படை உடையான் கருதும் கோயில்*
தென்நாடும் வடநாடும் தொழ நின்ற* திருவரங்கத் திருப்பதியின் மேல்*
மெய்ந்நாவன் மெய் அடியான் விட்டு சித்தன்* விரித்த தமிழ் உரைக்க வல்லார்*
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக் கீழ்*
இணை பிரியாது இருப்பர் தாமே| (2)
026. திவ்ய ப்ரபந்தம் - 423 - பெரியாழ்வார் திருமொழி - 4.10.1
துப்புடையாரை அடைவது எல்லாம்* சோர்விடத்துத் துணை ஆவர் என்றே*
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்* ஆனைக்கு நீ அருள் செய்தமையால்*
எய்ப்பு என்னை வந்து நலியும் போது*
அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்*
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்*
அரங்கத்து அரவணைப் பள்ளியானே| (2)
027. திவ்ய ப்ரபந்தம் - 424 - பெரியாழ்வார் திருமொழி - 4.10.2
சாம் இடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய்*
சங்கொடு சக்கரம் ஏந்தினானே!*
நா மடித்து என்னை அனேக தண்டம்* செய்வதா நிற்பர் நமன் தமர்கள்*
போம் இடத்து உன் திறத்து எத்தனையும்*
புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை*
ஆம் இடத்தே உன்னைச் சொல்லி வைத்தேன்*
அரங்கத்து அரவணைப் பள்ளியானே|
028. திவ்ய ப்ரபந்தம் - 425 - பெரியாழ்வார் திருமொழி - 4.10.3
எல்லையில் வாசல் குறுகச் சென்றால்* எற்றி நமன் தமர் பற்றும் போது*
நில்லு மின் என்னும் உபாயம் இல்லை* நேமியும் சங்கமும் ஏந்தினானே!
சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம்*
சொல்லினேன் என்னைக் குறிக் கொண்டு என்றும்*
அல்லல் படா வண்ணம் காக்க வேண்டும்*
அரங்கத்து அரவணைப் பள்ளியானே|
029. திவ்ய ப்ரபந்தம் - 426 - பெரியாழ்வார் திருமொழி - 4.10.4
ஒற்றை விடையனும் நான்முகனும்* உன்னை அறியாப் பெருமையோனே!*
முற்ற உலகு எல்லாம் நீயே ஆகி* மூன்று எழுத்து ஆய முதல்வனே!ஓ!*
அற்றது வாழ்நாள் இவற்கு என்று எண்ணி* அஞ்ச நமன் தமர் பற்றல் உற்ற*
அற்றைக்கு நீ என்னைக் காக்க வேண்டும்*
அரங்கத்து அரவணைப் பள்ளியானே|
030. திவ்ய ப்ரபந்தம் - 427 - பெரியாழ்வார் திருமொழி - 4.10.5
பை அரவின் அணைப் பாற்கடலுள்* பள்ளி கொள்கின்ற பரம முர்த்தி!*
உய்ய உலகு படைக்க வேண்டி* உந்தியிற் தோற்றினாய் நான்முகனை*
வைய மனிசரைப் பொய் என்று எண்ணிக்* காலனையும் உடனே படைத்தாய்*
ஐய! இனி என்னைக் காக்க வேண்டும்* அரங்கத்து அரவணைப் பள்ளியானே|
031. திவ்ய ப்ரபந்தம் - 428 - பெரியாழ்வார் திருமொழி - 4.10.6
தண்ணனவு இல்லை நமன் தமர்கள்* சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர்*
மண்ணொடு நீரும் எரியும் காலும்* மற்றும் ஆகாசமும் ஆகி நின்றாய்!*
எண்ணலாம் போதே உன் நாமம் எல்லாம்*
எண்ணினேன், என்னைக் குறிக் கொண்டு என்றும்*
அண்ணலே! நீ என்னைக் காக்க வேண்டும்*
அரங்கத்து அரவணைப் பள்ளியானே|
032. திவ்ய ப்ரபந்தம் - 429 - பெரியாழ்வார் திருமொழி - 4.10.7
செஞ்சொல் மறைப் பொருள் ஆகி நின்ற* தேவர்கள் நாயகனே! எம்மானே!*
எஞ்சலில் என்னுடை இன் அமுதே!* ஏழ் உலகும் உடையாய்! என் அப்பா!*
வஞ்ச உருவின் நமன் தமர்கள்* வலிந்து நலிந்து என்னைப் பற்றும் போது*
அஞ்சலம் என்று என்னைக் காக்க வேண்டும்*
அரங்கத்து அரவணைப் பள்ளியானே|
033. திவ்ய ப்ரபந்தம் - 430 - பெரியாழ்வார் திருமொழி - 4.10.8
நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன்* நமன் தமர் பற்றி நலிந்திட்டு*
இந்த ஊனே புகே என்று மோதும் போது*
அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்*
வான் ஏய் வானவர் தங்கள் ஈசா!* மதுரைப் பிறந்த மாமாயனே!*
என் ஆனாய்! நீ என்னைக் காக்க வேண்டும்*
அரங்கத்து அரவணைப் பள்ளியானே|
034. திவ்ய ப்ரபந்தம் - 431 - பெரியாழ்வார் திருமொழி - 4.10.9
குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா!* கோ நிரை மேய்த்தவனே! எம்மானே!*
அன்று முதல் இன்று அறுதியாக* ஆதியஞ் சோதி மறந்து அறியேன்*
நன்றும் கொடிய நமன் தமர்கள்* நலிந்து வலிந்து என்னைப் பற்றும் போது*
அன்று அங்கு நீ என்னைக் காக்க வேண்டும்*
அரங்கத்து அரவணைப் பள்ளியானே|
035. திவ்ய ப்ரபந்தம் - 432 - பெரியாழ்வார் திருமொழி - 4.10.10
மாயவனை மதுசூதனனை* மாதவனை மறையோர்கள் ஏத்தும்*
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை* அரங்கத்து அரவணைப் பள்ளியானை*
வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன்* விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்*
தூய மனத்தனர் ஆகி வல்லார்* தூமணி வண்ணனுக்கு ஆளர் தாமே| (2)
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment