About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 9 June 2024

108 திவ்ய தேசங்கள் - 035 - திருதேவனார் தொகை 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||035. திருதேவனார் தொகை||
||திருநாங்கூர்||
||முப்பத்தி ஐந்தாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1248 - பெரிய திருமொழி - 4.1.1
போது அலர்ந்த பொழில் சோலைப்* புறம் எங்கும் பொரு திரைகள்*
தாது உதிர வந்து அலைக்கும்* தட மண்ணித் தென் கரை மேல்*
மாதவன் தான் உறையும் இடம்* வயல் நாங்கை* வரி வண்டு
தேதென என்று இசை பாடும்* திருத்தேவனார் தொகையே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1249 - பெரிய திருமொழி - 4.1.2
யாவரும் ஆய் யாவையும் ஆய்* எழில் வேதப் பொருள்களும் ஆய்*
மூவரும் ஆய் முதல் ஆய* மூர்த்தி அமர்ந்து உறையும் இடம்*
மா வரும் திண் படை மன்னை* வென்றி கொள்வார் மன்னு நாங்கை*
தேவரும் சென்று இறைஞ்சு பொழில்* திருத்தேவனார் தொகையே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1250 -  பெரிய திருமொழி - 4.1.3
வான் நாடும் மண் நாடும்* மற்று உள்ள பல் உயிரும்*
தான் ஆய எம் பெருமான்* தலைவன் அமர்ந்து உறையும் இடம்*
ஆனாத பெருஞ் செல்வத்து* அரு மறையோர் நாங்கை தன்னுள்*
தேன் ஆரும் மலர்ப் பொழில் சூழ்* திருத்தேவனார் தொகையே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1251 - பெரிய திருமொழி - 4.1.4
இந்திரனும் இமையவரும்* முனிவர்களும் எழில் அமைந்த*
சந்த மலர்ச் சதுமுகனும்* கதிரவனும் சந்திரனும்*
எந்தை! எமக்கு அருள் என நின்று* அருளும் இடம் எழில் நாங்கை*
சுந்தர நல் பொழில் புடை சூழ்* திருத்தேவனார் தொகையே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1252 - பெரிய திருமொழி - 4.1.5
அண்டமும் இவ் அலை கடலும்* அவனிகளும் குல வரையும்*
உண்ட பிரான் உறையும் இடம்* ஒளி மணி சந்து அகில் கனகம்*
தெண் திரைகள் வரத் திரட்டும்* திகழ் மண்ணித் தென் கரை மேல்*
திண் திறலார் பயில் நாங்கைத்* திருத்தேவனார் தொகையே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1253 - பெரிய திருமொழி - 4.1.6
ஞாலம் எல்லாம் அமுது செய்து* நான்மறையும் தொடராத*
பாலகன் ஆய் ஆல் இலையில்* பள்ளி கொள்ளும் பரமன் இடம்*
சாலி வளம் பெருகி வரும்* தட மண்ணித் தென் கரைமேல்*
சேல் உகளும் வயல் நாங்கைத்* திருத்தேவனார் தொகையே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1254 - பெரிய திருமொழி - 4.1.7
ஓடாத வாளரியின்* உரு ஆகி இரணியனை*
வாடாத வள் உகிரால்* பிளந்து அளைந்த மாலது இடம்*
ஏடு ஏறு பெருஞ் செல்வத்து* எழில் மறையோர் நாங்கை தன்னுள்*
சேடு ஏறு பொழில் தழுவு* திருத்தேவனார் தொகையே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1255 - பெரிய திருமொழி - 4.1.8
வார் ஆரும் இளங் கொங்கை* மைதிலியை மணம் புணர்வான்*
கார் ஆர் திண் சிலை இறுத்த* தனிக் காளை கருதும் இடம்*
ஏர் ஆரும் பெருஞ் செல்வத்து* எழில் மறையோர் நாங்கை தன்னுள்*
சீர் ஆரும் மலர்ப் பொழில் சூழ்* திருத்தேவனார் தொகையே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1256 - பெரிய திருமொழி - 4.1.9
கும்பம் மிகு மத யானை* பாகனொடும் குலைந்து வீழ*
கொம்பு அதனைப் பறித்து எறிந்த* கூத்தன் அமர்ந்து உறையும் இடம்*
வம்பு அவிழும் செண்பகத்தின்* மணம் கமழும் நாங்கை தன்னுள்*
செம் பொன் மதிள் பொழில் புடைசூழ்* திருத்தேவனார் தொகையே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1257 - பெரிய திருமொழி - 4.1.10
கார் ஆர்ந்த திருமேனிக்* கண்ணன் அமர்ந்து உறையும் இடம்*
சீர் ஆர்ந்த பொழில் நாங்கைத்* திருத்தேவனார் தொகை மேல்*
கூர் ஆர்ந்த வேல் கலியன்* கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்*
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து* இமையவரோடு இருப்பாரே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment